அமைதி பாதிக்கப்படும்.. போலீஸ் எஸ்.பியை மிரட்டினாரா எடியூரப்பா? காங். வெளியிட்ட வீடியோ
பெங்களூர்: கொலை வழக்கு ஒன்றில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து கைது செய்வதாக காவல்துறை எஸ்.பியிடம் கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மிரட்டும் தொனியி்ல் பேசும் வீடியோ காட்சிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரே என்ற நகரை சேர்ந்த இமானுவேல் வருண் என்ற 24 வயது வாலிபர், கடந்த மாதம் 29ம் தேதி சிலரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கொலை சம்பவம் தொடர்பாக 11 பேரையும், வன்முறை தொடர்பாக 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது மதம் தொடர்பான பிரச்சினை கிடையாது என்றும், உடற்பயிற்சி மையம் அமைப்பது தொடர்பாக நண்பர்களுக்குள் நடந்த தகராறு என்றும், காவல்துறை கூறியுள்ளது.
இதனிடையே, ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராகுல் குமார் ஷகபுர்வட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடியூரப்பா மிரட்டும் தொனியில் பேசும் காட்சிகளை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரிஜேஷ் கல்லப்பா வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சியில் எடியூரப்பா பேசுகையில், "நீங்கள் ஏற்கனவே 14-15 இந்து இளைஞர்களை கைது செய்துள்ளீர்கள். இன்னும் சிலரை டார்ச்சர் செய்து வருகிறீர்கள். தயவு செய்து இனியாவது இப்படி செய்யாதீர்கள். இது சரியில்லை. இப்படி செய்தால், அரிசிகெரேயில் அமைதி பாதிக்கப்படலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லப்பா கூறுகையில், விசாரணையில் எடியூரப்பா அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளதற்கு இதுதான் சான்று என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கர்நாடகாவில் வைரலாக சுற்றி வருகிறது.