மத மாற்றம் ஓயும் வரை கர்வாப்ஸி நீடிக்கும்... இப்படி சொன்னவர்தான் உபி முதல்வர் 'யோகி'
மத மாற்றம் ஓயும் வரை சிறுபான்மையினரை இந்து மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என வெறித்தனமாக பேசிய யோகி ஆதித்யநாத்தைத்தான் பாஜக உ.பி. முதல்வராக்கியுள்ளது.
லக்னோ: மதமாற்றம் ஓயும் வரை சிறுபான்மையினரை இந்து மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என சொன்னவர்தான் தற்போது உத்தரப்பிரதேச முதல்வராகியிருக்கும் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 312 இடங்களில் பாஜக வென்றது. ஆனால் 312 பேரில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்யாமல் சர்ச்சை சாமியார் யோகி ஆதித்யநாத்த் எம்.பி.க்கு மகுடம் சூட்டியுள்ளது பாஜக.
வெறித்தனமான பேச்சுகளால் மத நல்லிணக்கத்தை கூறுபோட்டவர்தான் இந்த யோகி ஆதித்யநாத். அன்னை தெரசா, மதமாற்றத்துக்காகவே இந்தியா வந்தார் என பேசியதும் இந்த சாமியார்.
அதேபோல் மத மாற்றம் ஓயும் வரை தாய் மதத்துக்கு திரும்ப அழைக்கும் கர்வாப்ஸி நீடிக்கும் என்று பேசியவரும் இந்த யோகி ஆதித்யநாத்தான்.
கர்வாப்ஸி
அவரது முந்தைய சர்ச்சை பேச்சில் ஒன்று இது:
மத மாற்றங்கள் தேசத்தின் மத நல்லிணக்கத்தையே சீர்குலைத்துவிடும். மத மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மத மாற்றங்கள் ஓயும் வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கர் வாப்ஸி நிகழ்ச்சிகள் நீண்டு கொண்டுதான் இருக்கும்.
முஸ்லிம்கள்தான்...
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இருந்துதான் தேச விரோதச் செயல்கள் உருவாகின்றன. இதற்கு மதச் சார்பற்றவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே பதிலளிக்க வேண்டும்.
இந்துக்கள் பாதுகாப்பு
இந்து சமுதாயத்தில், இந்துக்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒவ்வொரு தாயும், சகோதரியும் பாதுகாப்பு உணர்வுடன் உள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மதத்துக்கும் அதற்கான சுதந்திரம் இருக்கிறது.
முஸ்லிம்களிடம் அச்சம் ஏன்?
அப்படி இருக்கும்போது, முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டும் ஏன் அச்ச உணர்வு ஏற்படுகிறது? ஏன் தேச விரோதச் செயல்கள் அங்கிருந்து உருவாகின்றன. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் துக்கம் அனுசரிப்பதும் தோல்வியுற்றால் பட்டாசு வெடித்தும் ஏன் கொண்டாடுகிறார்கள்.