தமிழ்நாட்டுக்கு ஒரு த.மா.கா.. ஆந்திராவுக்கு ஒய்எஸ்ஆர்.. ஆக மொத்தம் காங்கிரசுக்கு 'ஆப்பு'!
ஹைதராபாத்: சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டுள்ளது, உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி பெற்ற தோல்வி மற்றும், கருத்துக் கணிப்புகளை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸைப் போல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒரிஜினல் காங்கிரசின் வாக்குகளை அப்படியே அள்ளிக் கொண்டு போய்விட்டது தெளிவாகிறது.
காங்கிரஸ் மீது கோபம்
ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க கூடாது என்ற சீமாந்திரா பகுதி மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் காங்கிரஸ் மீது இப்பகுதி மக்கள் கோபத்திலுள்ளனர். அந்த கோபத்தை உள்ளாட்சி தேர்தலில் காட்டியதன் விளைவாக எந்த ஒரு உள்ளாட்சி அமைப்பையும் காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை. மாறாக, தெலுங்கு தேசம் மற்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வெற்றியை பகிர்ந்து கொண்டன.
தமாக தோற்றம்
1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று தமிழக காங்கிரசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை மீறி அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். இதை தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னணி தலைவர்கள் எதிர்த்தனர். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
ரஜினி வாய்ஸ்
அதிமுக-காங்கிரஸ் ஓரணியாகவும், திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் ஓரணியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ரஜினி வாய்சும் திமுக கூட்டணிக்கு கிடைத்தது. திமுக 167 சட்டசபை தொகுதிகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் 39 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றன. அதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பர்கூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தோல்வியடைந்தார்.
யாத்திரையை நிறுத்து..
ஆந்திராவிலும் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர். ஆந்திர முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து தந்தையின் இடத்தை பிடித்து பெரும் தலைவராக உருவாக ஜெகன்மோகன் ரெட்டி முயன்றார். அதன் ஒருபகுதியாக, ராஜசேகர ரெட்டி உயிரிழந்ததை கேட்ட அதிர்ச்சியில் இறந்த தொண்டர்கள், மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பாத யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையை நிறுத்திக்கொள்ளுமாறு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. ஆனால் இது தனது சொந்த வாழ்க்கை தொடர்பான யாத்திரை என்று கூறி ஜெகன்மோகன்ரெட்டி யாத்திரையை தொடர்ந்தார்.
ஒய்எஸ்ஆர் உதயம்
கட்சியின் உத்தரவை மீறியதற்காக அவர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து 2011ம் ஆண்டு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கினார் ஜெகன். இதையடுத்து சிபிஐ இவர் மீது பல ஊழல் வழக்குகளை சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்தது. ஓராண்டு கால சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த ஜெகன் மோகன் ரெட்டி , நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆந்திராவை பிரித்ததில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறி சீமாந்திரா மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார்.
காங்கிரஸ் தோல்வி
தமிழகத்தி்ல தமிழ்மாநில காங்கிரஸ் செய்ததைப்போல சீமாந்திராவிலும் காங்கிரசை நிர்மூலமாக்கி அதன் வாக்குகளையும் தனது கட்சிக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார் என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உரத்துக் கூறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலிலும் சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடையும் என்று எக்சிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.
மேலிடத்தால் வினை
தமிழகத்து காங்கிரஸ் தலைவர்களை மதிக்காமல் மேலிடம் சுயேச்சையாக முடிவெடுத்ததால்தான் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. அதேபோல தங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் மகன் வளர்ச்சியடைவது பிடிக்காமல் அவரது சுதந்திரத்தில் தலையிட்டதால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உதித்துள்ளது. மேலிட தலையீடுகளால் மாநில அளவில் காங்கிரசின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததற்கு அண்டை மாநிலங்களான தமிழகமும், ஆந்திரமுமே சாட்சியாக நிற்கிறது.