பூமிக்கு அடியில் உறங்கும் பயங்கரம்.... ஆய்வாளர்கள் எச்சரிக்கைக்கு டிரெய்லரா 'மியான்மர்' நிலநடுக்கம்?
டெல்லி: வங்கதேசம், கிழக்கு இந்தியாவில் பூமிக்கு அடியில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது... இந்த நிலநடுக்கத்தால் வரலாறு காணாத பிரளயத்தை வங்கதேசம், இந்தியா மியான்மர் சந்திக்கப் போகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரித்த ஒரே மாதத்தில் மியான்மரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தனர். அதில், வங்கதேசமும் கிழக்கு இந்தியாவும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் மீது அமைந்துள்ளன. இந்த பகுதிகள் நிலநடுக்கத்தை தாங்க முடியாத லேசான பகுதிகள்.
இந்த பகுதிகளில் கீழே உள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தட்டுகளின் அழுத்தம் மிகவும் அதிகரித்து வருகின்றன. இதனால் மிக பயங்கரமான பூகம்பம் ஒன்று ரிக்டரில் 8.2 முதல் 9 அல்லது 9-க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் அபாயம் உள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு வடக்கு நோக்கி முட்டி மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியா ஒரு மோதல்தான் இமயமலை வளர்வதற்கு காரணமாகவும் இருந்ததாம்....
கடந்த ஆண்டு நேபாளத்தில் 9000 உயிர்கள் பலி கொள்ளப்பட்டதற்கும் இந்த நகர்வுதான் காரணமாம். இதுவரை சிலி பூகம்பம், 2004 சுமத்ரா பூகம்பம்- சுனாமி, 2011-ல் புகுஷிமா பூகம்பம் ஆகியவை பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இனி வங்கதேசத்தை மையமாக கொண்டு உருவாக காத்திருக்கும் கண்டத்தட்டுகளின் அழுத்தம் என்பது சுமார் 400 ஆண்டுகாலமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். இதனால் மிகப் பெரிய பூகம்ப பிரளயத்தை இந்தியா, வங்கதேசம் மட்டுமின்றி மியான்மரும் கூட எதிர்கொள்ளத்தான் போகிறது; சுமார் 14 கோடி பேர் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
[Read this: மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்- வடகிழக்கு மாநிலங்கள், மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட் அதிர்ந்தன]
தற்போது மியான்மரில் 6.8 அலகுகளில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த மிகப் பெரிய பூமி பிரளயத்துக்கு முன்னோட்டமாக இது இருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.