துபாய்: ரமலான் மாதத்தில் பிச்சை எடுத்த 65 பேர் போலீசில் பிடிபட்டனர்
துபாய்: ரமலான் நோன்புக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பிச்சை எடுத்ததற்காக பெண்கள் உட்பட 65 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர்.
ரமலான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல; முஸ்லிம்கள் ‘ஸக்காத்து' எனப்படும் தான தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமலான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.
ஆனால், பிச்சையெடுக்கும் சாக்கில் சிலர் பணக்கார வீடுகளில் புகுந்து திருட்டுக் காரியங்களில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் நகரில் மசூதிகள், மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்து திரிந்த 54 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை என 65 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்களில் ஒரு பெண், மற்றொரு வளைகுடா நாட்டில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதானவர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக 48 தனிப்படையினரை போலீசார் நியமித்துள்ளனர்.