மாயமான ஏர் ஏசியா விமானம் கடலுக்கடியில் மூழ்கியிருக்கலாம் - இந்தோனேஷிய மீட்புப் படை
ஜகார்த்தா: 162 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம், கடலில் விழுந்து கடலுக்கு அடியில் போயிருக்கலாம் என்று இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை தலைவர் பம்பாங் சோலிஸ்டியோ கூறியுள்ளார்.
இவரது கருத்தின் மூலம் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விமானம் கடலில் விழுந்து, கடலுக்கு அடியில் போயிருக்கலாம் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக பம்பாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பல்வேறு தேடுதல் படையினர் எங்களுக்குக் கொடுத்த தகவல்கள், விமானம் சம்பந்தப்பட்ட நேரத்தில் இருந்த இடம், அதன் எரிபொருள் நிலவரம் ஆகியவற்றைவைத்து பார்க்கும்போது விமானம் கடலுக்கு அடியில் ஆழமான இடத்திற்குப் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
இது பூர்வாங்க சந்தேகம்தான். தொடர் தேடுதலில் இதை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
கடலுக்கு அடியில் சிக்கியிருந்தால் அதை மீட்டு வெளியே கொண்டு வருவதற்குத் தேவையான வசதிகள் இந்தோனேசியாவிடம் இல்லை. இருப்பினும் தேவைப்பட்டால் பிற நாடுகளின் உதவியை நாடுவோம். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியைப் பெற முடியும் என்றார் அவர்.
இந்தோனேசியாவின் சுரபயா என்ற இடத்திலிருந்து இந்த விமானம் சிங்கப்பூருக்குக் கிளம்பியது. ஆனால் வழியில் வானிலை மோசமாக இருந்ததால் அது திசை மாறிச் சென்றுள்ளது. அதன் பின்னர் அது காணவில்லை.