ஐஎஸ்ஐஎஸ் தலைவர் தன்னைத் தானே கலிபா என்று அறிவித்தது சட்டவிரோதமானது: அல் கொய்தா
ரக்கா: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை கலிபாவாக அறிவித்தது சட்டவிரோதமானது என்று அல் கொய்தா அமைப்பின் சிரியா பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னைத் தானே கலிபாவாக அறிவித்துக் கொண்டார். இந்நிலையில் இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரி அமைப்பான அல் கொய்தாவின் சிரியா பிரிவு தலைவரும், அல் நுஸ்ரா முன்னணியின் தலைவருமான அபு முகமது அல் ஜொலானி கூறுகையில்,
அவர்கள் கலிபாவை அறிவித்துள்ளனர். ஆனால் அது சட்டவிரோதமானது என்று அறிஞர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர். அந்த அறிவிப்பு இஸ்லாமிய சட்டத்தின்படி வெளியிடவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் அல் நுஸ்ரா அமைப்பைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்துள்ளனர்.
அவர்களுக்கும், எங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக வருந்தி சன்னி மக்களிடம் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறோம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாத்தின் பாதையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.
சந்தைகளுக்கு குண்டு வைப்பது மற்றும் மசூதிகளில் வைத்து மக்களை கொல்வது இல்லை என்ற எங்களின் கொள்கை அவர்களுக்கு இல்லை. அல் நுஸ்ரா அல் கொய்தாவை விட்டு வெளியேறுவது பற்றி பேச்சு இல்லை. அல் நுஸ்ரா அமைப்பில் உள்ளவர்களில் 30 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். எங்கள் அமைப்பில் சில அமெரிக்கர்களும் உள்ளனர் என்றார்.