அனிதாவுக்காக மூன்றாவது வாரமாக.... இந்திய தூதரகங்கள் முன் அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்!
வாஷிங்டன்(யு.எஸ்): அனிதாவின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக அமெரிக்கத் தமிழர்களின் அஞ்சலி நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெற்றது. தொடர்ந்து அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை கேட்டும் போராட்டங்களாக உருவெடுத்தது.
மூன்றாவது வாரமாக அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது. வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவலங்களுக்கு முன்பாக போராட்டம் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 16, சனிக்கிழமை வாஷிங்டன் டிசியில் இந்திய தூதரகத்திற்கு முன் தமிழர்கள் ஒன்று கூடி கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள் . ஞாயிற்றுக்கிழமை சிகாகோ, நியூயார்க் மற்றும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரங்கள் முன்பு போராட்டம் தொடர்கிறது.
வாஷிங்டன் டி.சி: சனிக்கிழமை, காலை 11:00 மணி
நியூயார்க்: ஞாயிற்றுக்கிழமை, காலை 11:00 மணி
சிகாகோ: ஞாயிற்றுக்கிழமை. காலை 11:00 மணி
சான்பிரான்சிஸ்கோ: ஞாயிற்றுக்கிழமை, மதியம் 02:00 மணி
அனிதாவின் மரணத்திற்கு நீதி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களில் கையெழுத்து பெறப்படுகிறது. அடுத்த வார தொடக்கத்தில் இந்த மனுக்கள் இந்திய தூதரகங்களில் நேரடியாக வழங்கப்பட உள்ளன.
உலகெங்கும் அனிதாவுக்கு நீதி கேட்டுப் போராடி வரும் தமிழர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், மேலும் தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்றும் அமெரிக்கத் தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக, உலகெங்கும் உள்ள இந்திய தூதரங்கள் முன்பு போராட்டம் நடத்தி மனு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
-இர தினகர்