தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல- அனைவரும் ஏற்பது ஒரே சீனாதான்... சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ
பெஜ்யிங்: தைவான் என்பது ஒரு நாடே அல்ல; உலக நாடுகள் அனைத்தும் ஏற்பது ஒற்றை சீனா என்கிற ஒரே சீனாவைத்தான் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சீனாவில் கம்யூனிசப் படைகளிடம் தோல்வி அடைந்த தேசியவாதிகள் தைவானுக்கு தப்பி ஓடினர். தைவானுக்குள் நுழைந்த சீனாவின் தேசியவாத சக்திகள், அந்நாட்டையே சீனா என அழைத்தும் கொண்டன.
1970கள் வரை உலக நாடுகள் பெரும்பாலானவை தைவானையே ஒரிஜினல் சீனா குடியரசு என ஏற்றன. அதனால் இன்றளவும் தைவான் தம்மையே ஒரிஜனல் சீனா என்கிறது. 1970களுக்கு பின்னர் இன்றைய கம்யூனிச சீனாவும் உலகின் வல்லாதிக்க சக்திகளில் ஒன்றானது. உலக நாடுகள் கம்யூனிச சீனாவையும் ஏற்றுக் கொண்டன.
இதனால் தைவான், சீனா விவகாரத்தில் பெரும்பாலான உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவும் தைவான் விவகாரத்தில் குழப்பமான நிலையைத்தான் கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென தைவானை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி அந்நாட்டுக்கு சென்றார். இதனால் சீனா கடும் ஆத்திரம் அடைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தைவான் கடற்பிராந்தியத்தில் யுத்த சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
இந்நிலையில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியிருப்பதாவது: தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பு பல பொய் தகவல்களையும் உண்மையற்ற அம்சங்களையும் பரப்பி வருகின்றது. உண்மைகளை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியமானது. தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே சீனா என்பது மட்டுமே உண்டு.
தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒரே நாட்டைச் சேர்ந்தவை. வரலாற்றிலும் இன்றைய காலத்திலும் காணப்பட்ட நிலைமை இது தான். 1978ஆம் ஆண்டு சீனாவும் அமெரிக்காவும் தூதரக உறவை நிறுவுவது தொடர்பான கூட்டறிக்கையில், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், முழு சீனாவைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரேயொரு அரசாங்கம். தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்நிலைமை சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அமெரிக்கா மற்றும் தைவானிலுள்ள பிரிவினைச் சக்திகள் தான்.
சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா. அமெரிக்கா இத்தகைய நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்துவதை, நாங்கள் நீண்டகாலம் கேட்கவில்லை. தற்போது வரை, வேறு நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை அமெரிக்கா பலமுறை மீறியுள்ளது. இதில் அமெரிக்கா மாற்றம் செய்து சரியாக செயல்பட்டால், அதனை ஊக்குவிப்போம். இந்த நிலைப்பாட்டை நடைமுறையில் கொண்டு வருவது திறவு கோல் ஆகும். முதன்முதலில், தைவான் விவகாரத்தில், சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை மதிக்கும் வாக்குறுதியை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும். இவ்வாறு வாங் யீ கூறினார்.