இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: பிரதமர் கேமரூன் விருப்பம்
லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் மேலும் பல முக்கிய ராணுவ, நீதித்துறை பதவிகள் மற்றும் அரசியலுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்.
இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் பங்கேற்ற தீபாவளி வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு, லண்டனில் உள்ள பிரதமர் டேவிட் கேமரூனின் அலுவலக இல்லத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டது.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கேமரூன், இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் அரசியல் உட்பட மேலும் பல முக்கிய பதவிகளுக்கு வரவேண்டும் என தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது, ‘இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய இளைஞர்கள் பலதுறைகளில் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் நாம் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இங்கே சைலேஷ் வாரா (நீதித்துறை அமைச்சர்), எம்.பிக்கள் அலோக் சர்மா (கன்சர்வேடிவ் கட்சி துணைத்தலைவர்), பிரிதி பட்டேல் மற்றும் கெயித்வாஸ் (உள் விவகார கமிட்டி சேர்மன்) ஆகியோரை பார்க்கிறோம்.
இவர்களை போல இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள், இந்தியர்கள் முக்கியமான நீதித்துறை, ராணுவத்துறை பதவிக்கு வர வேண்டும். அதோடு அரசியலிலும் பெரிய பதவிக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
தற்போது இங்கே இந்தியர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போதாது இவர்கள் பொது சபைக்கும், பிரபுக்கள் சபைக்கும் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்திலும் அதிகம் பேர் இடம் பெற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், ‘இங்கிலாந்து-இந்தியா இடையிலான நல்லுறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இது உறுதியான, உள்ளப்பூர்வமான உறவு. வரலாறு, மொழியாலும் இணைந்துள்ளோம்' என்றார்.
இன்னும் இரு வாரங்களில், தனது 3 வது இந்திய சுற்றுப் பயணமாக கேமரூன் இந்தியாவிற்கு வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.