அமைதிக்கான நோபல் பரிசு...டொனால்ட் ட்ரம்ப் பெயர்... நார்வே பரிந்துரை!!
ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாடாளுமன்றம் நியமனம் செய்துள்ளது.
நார்வே நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அந்த நாட்டின் எம்பி கிறிஸ்டியன் டைபிரிங் ஜெட்டே பாராட்டிப் பேசினார். நார்வே நாடு பரிந்துரை செய்து இருப்பதை அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டால், அவரும் பராக் ஒபாமாவைப் போல பெருமைக்குரியவர் பட்டியலில் இடம் பிடிப்பார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது. சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய வகையில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது.

அமெரிக்கா அதிபருக்கான தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக கடுமையான பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. மில்லியன் கணக்கில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் சுமூகமான உறவை வைத்துக் கொள்வது, இதற்கு மாறாக வெஸ்ட் பேங்குடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் தீர்மானம் ட்ரம்ப் கொண்டு வந்து இருந்தார். ஆனால், பெரிய அளவில் இந்த தீர்மானம் முக்கியத்துவம் பெறவில்லை.

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உறவை இயல்பாக்கும் வகையில் மத்திய கிழக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதற்கு ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications