ஷீனா வழக்கில் திடீர் திருப்பம்... இந்திராணியின் முதல் கணவர் வங்கதேசத்துக்கு "எஸ்கேப்"
டாக்கா: ஷீனா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்டுள்ள இந்திராணியின் முதல் கணவரும், ஷீனாவின் ஒரிஜினல் தந்தையுமான சித்தார்த் தாஸ் வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார் இந்தியா டி.வி. நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பீட்டர் முகர்ஜியின் மூன்றாவது மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது முதல் கணவர் சித்தார்த் தாஸ். முதல் கணவர் மூலமாக இந்திராணிக்கு பிறந்தவர்கள் தான் ஷீனா போராவும், மிக்கயில் போராவும். 2வது கணவர் சஞ்சீவ் கன்னா. இவர் மூலம் ஒரு மகள் உள்ளார். பீட்டர் மூலம் குழந்தை ஏதும் கிடையாது.
கடந்த 2012ம் ஆண்டு ஷீனா போரா படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த மாதம் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தங்கையல்ல மகள்...
இந்திராணியின் கைதுக்கு பின்னரே ஷீனா போராவும், மிக்கயில் போராவும் அவரது மகன், மகள் என்பது சமுதாயத்திற்கு தெரிய வந்தது. அதற்கு முன்பு வரை இந்திராணி அவர்களைத் தன் உடன்பிறந்தவர்கள் என்றே அடையாளப்படுத்தி இருந்தார்.
சித்தார்த் தாஸ்...
இந்நிலையில், இந்திராணி பணத்தாசை, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவர் என அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
புதிய சந்தேகங்கள்...
இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் இந்திராணி கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே வங்கதேசம் போய் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷீனாவின் கொலை வழக்கில் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கணவன் -மனைவியாக வாழ்ந்தனர்...
சித்தார்த்தும், இந்திராணியும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனபோதும் கணவன், மனைவியாக 1989-ம் ஆண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஷீனாவும், மிக்கயில் போராவும்.
அடுத்தடுத்து திருமணம்...
சித்தார்த்தைப் பிரிந்த பின்னர் சஞ்சீவ் கன்னாவைத் திருமணம் செய்து கொண்ட இந்திராணி, பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து பீட்டர் முகர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார்.
தலைமறைவு...
இதேபோல் வேறொரு பெண்ணை மணந்து அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வந்த சித்தார்த், இந்தியா - வங்கதேசம் எல்லைக்கு அருகே சுடர்கண்டி என்ற இடத்தில் தற்போது உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அப்துல் அபெட் என்ற நபர் சித்தார்த்திற்கு உதவியுள்ளார். இவர் ஏற்கனவே 2004ம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் நடந்த பிரபல வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
பாதுகாப்பான இடம்...
தப்பிச் செல்வதற்கு முன்னதாக தன் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் பாதுகாப்பான இடத்திற்கு தனது தம்பி மூலம் அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
சித்தார்த்திற்கும் பங்கு...?
சித்தார்த் வங்கதேசம் தப்பிச் சென்றுள்ளார் என்ற தகவலால் ஷீனாவின் கொலை வழக்கில் பல புதிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திராணி கைது செய்யப்படுவதற்கு முன்னதாக எதற்காக சித்தார்த் தப்பிச் சென்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியென்றால் ஷீனாவின் கொலையில் சித்தார்த்திற்கும் பங்குள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணம் கேட்டு மிரட்டல்...
பெரும் பணக்காரரை மணந்த இந்திராணியை அவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே, போலீஸ் விசாரணைக்குப் பயந்தே அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஒத்துழைப்பேன்...
ஆனால், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சித்தார்த், ‘இந்திராணி பணத்தாசையும், ஆடம்பர வாழ்க்கையையும் விரும்பினாள். அதன் காரணமாக பிரிந்தோம். ஷீனா போரா கொலை தகவல் குறித்து போலீசார் விசாரிப்பதாக தெரிகிறது. போலீசார் விசாரணைக்கு நான் ஒத்துழைக்க தயாராக உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.