ஜெர்மன்: செயற்கை எலும்பு மஜ்ஜையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
பெர்லின்: ரத்தப் புற்றுநோய் சிகிச்சை முறையில் முக்கியப் பங்கு வகிக்கும் எலும்பு மஜ்ஜையின் செயற்கை மாதிரியை ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல்ஸ்ரூ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் உள்ள மேக்ஸ்பிளான்க் நுண்ணறிவு அமைப்புகள் நிறுவனம், டியுபிங்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து தங்களின் ஆய்வகத்தில் எலும்பு மஜ்ஜைகளின் அடிப்படை பண்புகளை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.
புற்று நோய் தாக்கத்தினால் இறந்திருக்கும் ஒரு நோயாளியின் ரத்த சிவப்பணுக்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி அணுக்களை பொருத்தமான நன்கொடையாளியின் ஸ்டெம்செல்கள் கொண்டு எவ்வாறு மாற்ற முடியுமோ அந்தப் பணியை செயற்கை ஹெமடோபோயடிக் செல்கள் கொண்டும் நிறைவேற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
தற்காலத்தில் இரத்த புற்றுநோயால் அவதிப்படும் அனைவருக்கும் தகுந்த நன்கொடையாளர்கள் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய செயற்கை உற்பத்தியை அதிகரிப்பது நோயாளிகளுக்கு நன்மை அளிப்பதாக அமையும். எனினும், மனித உடலில் அமைந்துள்ள இயற்கையான சூழலிலேயே இந்த ஹெமடோபோயடிக் செல்கள் தங்கள் பண்புகளில் நீடித்திருப்பதால் அதுபோன்ற ஒரு சூழலை செயற்கையாக உருவாக்க விஞ்ஞானிகள் முயன்றனர்.
செயற்கை பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட பஞ்சு போன்ற எலும்பு அமைப்பில் தொப்புள்கொடி ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹெமடோபோயடிக் செல்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. சில நாட்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளில் இந்த செல்கள் வளர்ச்சிபெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இத்தகைய செயற்கைப் பொருட்கள் ஸ்டெம் செல்களின் மீது தோற்றுவிக்கும் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் முடிவுகளின்மூலம் செயற்கை எலும்பு மஜ்ஜைகள் மேம்படுத்தப்பட்டு இன்னும் 10- 15 வருடங்களுக்குள் ரத்த புற்று நோயாளிகளுக்குத் தேவையான ஹெமடோபோயடிக் செல்களை அதிக அளவில் பெறமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.