பல நாடுகளிலும் ரமலான் மாதம் தொடங்கியது... வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
ரியாத்: சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்கியது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ராமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பின் போது, இஸ்லாமியர்கள் எச்சில் கூட விழுங்கமாட்டார்கள். அந்தளவிற்கு கடுமையாக நோன்பை கடைபிடிப்பதோடு வறியவர்களுக்கு இம்மாதத்தில் தான தர்மங்கள் அதிகம் செய்வார்கள். இதனால் இதனை ஈகை மாதம் என்றும் அழைப்பதுண்டு.
இந்தியாவில் நாளை (சனிக்கிழமை) முதல் ரமலான் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சவுதி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இன்றே தொடங்கிவிட்டது. வழக்கமாக ரமலான் மாதத்தை சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கொண்டாடி வரவேற்று மகிழும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு களையிழந்து காணப்படுகின்றன.
புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதால் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ள சவுதி அரேபியா மன்னர் சல்மான், இம்மாதத்தில் தீமைகள் அகல இறைவனை பிரார்தித்து தான தர்மங்களை அதிகரித்து நல்வழியை பின்பற்றி வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், மெக்கா, மதீனா மற்றும் பள்ளிவாசல்களில் இம்மாதம் தொழுகை நடத்த முடியாததை எண்ணி மக்கள் எப்படி வேதனை அடைகிறார்களோ, அதைப்போலவே தானும் வேதனையும், துயரமும் அடைவதாக சவுதி மன்னர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.