கடனை திருப்பி தர முடியல.. லேடி போட்ட 'கில்லாடி ப்ளான்'.. கடைசியில்.. கூகுளால் சிக்கிய அதிசயம்!
ஜகார்டா: வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால், அதிலிருந்து தப்பிக்க ஒரு பெண் போட்ட மோசடி நாடகம்தான் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தனது மாஸ்டர் பிளானை செயல்படுத்திய போதிலும், கடைசியாக அவர் போட்ட நாடகம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதுதான் செம்ம ட்விஸ்ட்டே.
தற்போது இந்த சம்பவம் குறித்து கடன் கொடுத்தவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரூ.2 லட்சம் கடன்
இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரைச் சேர்ந்தவர் மாயா குணவான். இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு பேஸ்புக் மூலமாக லீஸா தேவி (34) என்ற பெண் அறிமுகமானார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, மாயாவிடம் லீஸா தேவி சீட்டும் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே நட்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், மாயாவிடம் ரூ.2 லட்சத்தை லீஸா தேவி கடனாக கேட்டுள்ளார்.

கடனை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு
நேரில் பார்க்காவிட்டாலும் தோழியாக மாறியதால், எதையும் யோசிக்காமல் ரூ.2 லட்சத்தை லீஸாவிடம் கொடுத்துள்ளார் மாயா. இந்த பணத்தை நவம்பர் 20-ம் தேதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார் லீஸா. அதன்படி, மாயா நவம்பர் 20-ம் தேதி லீஸாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனக்கு சொந்தமான நிலத்தை விற்றுவிட்டதாகவும், டிசம்பர் 6-ம் தேதி பணம் கட்டாயம் கிடைத்துவிடும். பின்னர், "உங்களுக்கு தர வேண்டிய தொகையை தந்துவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார் லீஸா. மாயாவும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

கார் விபத்தில் இறந்துவிட்டாராம்
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லீஸாவின் செல்போனுக்கு மாயா தொடர்புகொண்ட போது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தெரிவித்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார். அப்போதுதான், லீஸாவின் பேஸ்புக்குக்கு சென்று பார்க்கலாம் என மாயாவுக்கு தோன்றியது. அதன்படி, ஃபேஸ்புக்கில் சென்று பார்த்த போது, லீஸா இறந்து கிடப்பதை போன்ற புகைப்படம் இருந்துள்ளது. அதற்கு கீழே, "எனது தாயார் லீஸா கார் விபத்தில் இறந்துவிட்டார்" என அவரது மகள் நஜ்வா பதிவிட்டிருந்தார். இதை பார்த்து அதிர்ந்து போனார் மாயா. பின்னர் அதற்கு கீழே லீஸாவின் உடல், டாமியாங் என்ற நகரில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாலியில் இருந்து டாமியாங் பல நூறு கி.மீ. தொலைவில் உள்ளது.

பிணத்தை போல 'போஸ்'..
இதனால் சந்தேகமடைந்த மாயா, அந்தப் புகைப்படங்களை திரும்ப பார்த்துள்ளார். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் லீஸாவின் உடலை தள்ளிக்கொண்டு போவதை போன்ற புகைப்படமும் அதில் இருந்தது. அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்த போது, அது மாயாவின் முகத்துடன் ஒத்துப்போகவில்லை. பின்னர் அந்த புகைப்படத்தை மட்டும் காப்பி செய்து கூகுளில் போட்டு பார்த்துள்ளார். இதில், அந்த புகைப்படம் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு பெண்ணின் புகைப்படம் என்பது தெரியவந்தது. மேலும், பிணம் போல மூக்கில் பஞ்சை வைத்து லீஸா நடித்திருப்பதும் தெரியவந்தது.

புகார் - போலீஸ் வழக்கு பதிவு
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மாயா, லீஸாவின் இந்த மோசடி குறித்து போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், லீஸா உயிருடன் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் தலைமறைவானதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து மாயா கூறுகையில், "மகளின் சிகிச்சைக்கு என கேட்டதால்தான் இந்த பெரிய தொகையை லீஸாவிடம் கொடுத்தேன். அவர் இறந்து போனதாக புகைப்படத்தை பார்த்ததும், எனது பணத்தை கூட மறந்து, நல்ல தோழி ஒருவர் இறந்துவிட்டாரே என நினைத்துதான் வருத்தப்பட்டேன். ஆனால் அவர் என்னை இப்படி ஏமார்றுவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications