இத்தாலி எங்களை கைவிட்டுவிட்டது.. கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலுடன் 36 மணி நேரம் கதறிய சகோதரன்
ரோம்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் இறந்த ஒரு பெண்ணின் சகோதரர், தனது சகோதரியின் உடலை எடுக்க மருத்துவமனையில் மறுப்பதாகவும், இத்தாலி அதிகாரிகள் எடுத்து செல்ல வேண்டும் என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ கொரோனாவின் கொடூர முகத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
தெரசா ஃபிரான்சீஸ் வயது 47. இவர் தனது குடும்பத்துடன் இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸில் வசித்து வந்தார். கடந்த வாரம் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவருக்கு காட்டத் தொடங்கி உள்ளது.
இதையடுத்து அவரது உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் நோய்க்கான பரிசோதனையின் முடிவுகள் அறியப்படுதவற்கு முன்பே தெரசா சனிக்கிழமை இறந்தார்.
கொரோனா கொடுமை: கர்நாடகாவில் தியேட்டர்கள், மால்கள், பப்புகள் 1 வாரத்திற்கு மூடல்.. அதிரடி உத்தரவு
தவித்த சகோதரர்
இதையடுத்து தெரசாவுக்கு கொரோனா இருந்ததால் இல்லையா என்பது தெரியாத காரணத்தால், சுகாதார பணியாளர்களும் உள்ளூர் மருத்துவமனையும் அவரது உடலை எடுக்க மறுத்துவிட்டன. இதனால் அடக்கம் செய்ய முடியாமல் அவரது சகோதரர் லூகா ஃபிரான்சீஸ் தவித்தார். இதையடுத்து வேதனை அடைந்த அவர் பேஸ்புக்கில் தனது சகோதரியின் உடலுடன் முன்புறம் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இத்தாலி கைவிட்டுவிட்டது
அதில் "என் சகோதரி இறந்துவிட்டார், படுக்கையில் இருக்கிறார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இத்தாலி அதிகாரிகள் என்னைக் கைவிட்டதால் அவளுக்குத் தகுதியான இறுதி சடங்கை என்னால் கொடுக்க முடியாது. நாங்கள் பாழடைந்துவிட்டோம். இத்தாலி எங்களை கைவிட்டுவிட்டது. ஒன்றாக வலுவாக இருப்போம். தயவுசெய்து இந்த வீடியோவை எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று அவர் வேதனையுடன் பகிர்ந்தார்.
உடலை புதைத்தனர்
இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இறுதியாக, 36 மணிநேரம் காத்திருந்தபின், பாதுகாப்பு உடைகளை அணிந்தவர்கள் வந்து தெரசாவின் உடலை நேரடியாக ஒரு உள்ளூர் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு அவருக்கு எந்த சடங்கும் இல்லாமல் அவரை புதைத்தனர். இதில் கொடுமை என்னவென்றால் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அவர்களுக்கும் இந்த நோய் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக அவரது குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் தங்க வேண்டியிருந்தது.
பெற்றோருக்கும் பாதிப்பு
லூகா ஃபிரான்சீஸ், தனது சகோதரி தெரசா கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறினார். அவரது நிலை மோசமடைந்ததால், அவர் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இறுதியில் சோதனையில் லூகா ஃபிரான்சீஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்றார். இந்நிலையில் லூகா ஃபிரான்சீசின் வயதான பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
827 பேர் இதுவரை பலி
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. உணவு கடைகள் மற்றும் மருந்தகங்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கடைகளையும் இத்தாலி மூடியுள்ளது, ஏனெனில் இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்தது, 12,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.