ஆஸி. பிரதமர் பதவியிலிருந்து டோனி அப்போட் அதிரடி நீக்கம்... மால்கம் டர்ன்புல் புதிய பிரதமர்
கான்பெரா : ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், நேற்று பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பொருளாதார நிர்வாகத்தில் தோல்வியடைந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டோனி அப்போட்டின் தலைமையை எதிர்த்து வாக்கெடுப்பு கோரிய மால்கம் டர்ன்புல் 54 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆளும் கூட்டணியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டோனி அப்போட்டுக்கு 44 எம்.பி.க்களின் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதையடுத்து, பிரதமர் பதவியை டோனி அப்போட் ராஜினாமா செய்வார் எனவும், புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்குத் தேவையான சிறந்த பொருளாதார நிர்வாகத்தை டோனி அப்போட் வழங்கத் தவறியதால், அவரது தலைமைக்கு சவால் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டாக மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து மால்கம் டர்ன்புல் கூறியதாவது...
டோனி அப்போட்டை தலைமையிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பைக் கோரும் முடிவை நான் அவ்வளவு எளிதில் எடுத்துவிடவில்லை.
அதற்கு முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருடனும் இது குறித்து ஆழமாக விவாதித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.
தலைமையில் மாற்றம் வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டுக்கு மிக மிக அவசியமான, பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்தும் தலைமையை அளிக்க டோனி அப்போட் தவறிவிட்டார்.
இந்த அரசின் மோசமான பொருளாதார நிர்வாகத்துக்கு அமைச்சர்களைக் குறை கூற முடியாது. அதற்கு முழுக்க முழுக்க டோனி அப்போட்தான் காரணம் என்றார் அவர்.
ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை நாட்டின் கவர்னர் ஜெனரலிடம் டோனி அப்போட் விரைவில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாட்டின் 29-ஆவது பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார்.












Click it and Unblock the Notifications