ஏப்ரல் 8ம் தேதியோடு மலேசிய விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி ஆயுள் முடிகிறது
கோலாலம்பூர்: இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள பேட்டரியின் ஆயுள் வரும் ஏப்ரல் 12ம் தேதி முடிந்துவிடும். அதனால் அதற்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் கருவியை அமெரிக்க கடற்படை அனுப்பி வைத்துள்ளது.
கருப்புப் பெட்டி
விமானத்தின் கருப்புப் பெட்டி(பிளைட் டேட்டா ரெக்கார்டர்) மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்( விமானி அறையில் ஒலிகளை பதிவு செய்யும் கருவி) ஆகியவற்றை கண்டுபிடித்தால் விமானத்திற்கு ஏன் இந்த நிலை என்று தெரிய வரும். இந்த கருப்புப் பெட்டி மற்று வாய்ஸ் ரெக்கார்டரில் இருந்து ஒரு வகையான ஒலி வந்து கொண்டிருக்கும். அதை வைத்து தான் விமானத்தை கண்டுபிடிக்க முடியும்.
பேட்டரி
கருப்புப் பெட்டி மற்றும் வாய்ஸ் ரெக்கார்டரில் இருந்து வரும் ஒலியை நம் காதால் கேட்க முடியாது. அதற்குரிய கருவி மூலமே கண்டறிய முடியும். அவை இரண்டிலும் உள்ள பேட்டரி 30 நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். கருப்புப் பெட்டியும், வாய்ஸ் ரெக்கார்டரும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
அமெரிக்கா
கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்கா அனுப்பியுள்ள கருவி இந்திய பொருங்கடல் பகுதியை வந்தடைய ஏப்ரல் 5ம் தேதி ஆகும். ஆனால் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிகிறது. அதனால் ஏப்ரல் 7ம் தேதி முதல் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி குறையத் தொடங்கி 12ம் தேதி முழுவதுமாக அடங்கிவிடும்.
தேடல்
பேட்டரியின் ஆயுள் முடிய உள்ளதால் ஏப்ரல் 12ம் தேதிக்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் தேடல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் இரண்டு ஆண்டு வரை அதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்
கருப்புப் பெட்டியில் விமானம் சென்ற திசை, உயரம், வேகம் உள்ளிட்ட விவரங்கள் பதிவாகி இருக்கும். விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு 25 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இருக்கும். காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் விமானி அறையில் உள்ள மைக்ரோபோன்களில் பேசிய 2 மணிநேர பேச்சு பதிவாகியிருக்கும்.
ஹனிவெல்
விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரை ஹனிவெல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. அவை தீயில் ஒரு மணிநேரம், நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் தாக்குபிடிக்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளதாம். விமானத்தை தேடும் பகுதியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அடி ஆழம் இருப்பதால் அவற்றுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்கிறது ஹனிவெல்.