அமெரிக்க அதிபர் தங்கும் ஹோட்டலில் தங்கும் மோடி, இந்திய பிரதமர் தங்கும் ஹோட்டலில் ஒபாமா
நியூயார்க்: ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபும் ஒரே ஹோட்டலில் தங்க உள்ளார்களாம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் 70வது ஐ.நா.பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். புதன்கிழமை மாலை அமெரிக்காவை அடையும் அவர் நியூயார்க் நகரில் உள்ள பிரபல வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டலில் தங்குகிறார். வரும் 25ம் தேதி மாலை அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபும் மோடி தங்கும் அதே ஹோட்டலில் தான் தங்குகிறார் என்று கூறப்படுகிறது.
மோடியும், ஷரீபும் இருநாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களா என தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்குவது பலருக்கும் வியப்பளித்துள்ளது.
மோடி வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கலிபோர்னியாவில் இருப்பார். 28ம் தேதி நியூயார்க் திரும்புவார். அவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். வரும் 28ம் தேதி அவர் இந்தியாவுக்கு கிளம்புகிறார். ஆனால் ஷரீப் செப்டம்பர் 29ம் தேதி காலை வரை நியூயார்க் நகரில் இருப்பார்.
ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் வந்த அமெரிக்க அதிபர்கள் வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டலில் தான் வழக்கமாக தங்கியுள்ளனர். கடந்த ஆண்டு அந்த ஹோட்டலை சீன நிறுவனம் ஒன்று வாங்கிவிட்டது. இதனால் ஒபாமா அங்கு தங்கினால் சைபர் பிரச்சனை ஏற்படும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
இதையடுத்து ஒபாமா நியூயார்க் பேலஸ் ஹோட்டலில் தங்குகிறார். ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் இந்திய பிரதமர்கள் நியூயார்க் பேலஸ் ஹோட்டலில் தங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.