மெக்சிகோ வானை அலங்கரிக்கும் லட்சக்கணக்கான "மோனார்க்" பட்டாம்பூச்சிகள்..!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இந்த வருடம் மோனார்க் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்து எங்கும் பட்டாம்பூச்சி கூட்டமாக சுற்றி காண்போரை மகிழ்விக்கின்றதாம்.
வட அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு பனிக் காலத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
வானத்தை முழுவதாக மறைப்பது போல் கண்கவர் காட்சியாக விளங்கும் அந்த இடப்பெயர்வில் மோனார்க் பட்டாம்பூச்சிகள் சுமார் 2500 மைல் தூரத்தை பறந்தே கடக்கின்றன.
பறவை போன்ற பட்டாம் பூச்சிகள்:
பட்டாம்பூச்சிகளில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் இந்த அரிய வகை மோனார்க் பட்டாம்பூச்சிகள் மட்டுமே பறவை இனத்தை போல ஆண்டுதோறும் மிகப்பெரிய இடப்பெயர்வை மேற்கொள்கின்றன.
கொழுப்பாகும் உணவு:
இந்த இடப்பெயர்வுக்காக தான் உண்ணும் உணவை தன் உடலில் கொழுப்பாக சேர்த்துவைத்து பயன்படுத்தி கொள்கின்றன. பனிக்காலத்தில் வட அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நோக்கி பறக்கும் இந்த பட்டாம்பூச்சிகள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இருக்கும் மலைகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன.
ஊரையே மறைக்கும் பட்டாம்பூச்சிகள்:
இந்த உயரத்தில் இருப்பதால் அந்த பட்டாம்பூச்சிகள் காற்று, மழை, பனி மற்றும் இதர விஷயங்களால் பாதிப்படையாமல் பாதுகாப்பாக உள்ளன.
அங்குள்ள குளிர்ந்த வெப்ப நிலையில் மரங்களின் கிளைகள், இலைகள் என மொத்த மரத்தையும் மறைப்பதை போல பட்டாம்பூச்சிகள் அமர்ந்து கொள்கின்றன.
இயற்கையின் மாயம் இது:
பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அங்கிருக்கும் பட்டாம்பூச்சிகள் தெற்கு நோக்கி இடப்பெயர்வை மேற்கொள்ளத் தொடங்குகின்றன.
செப்டம்பர் மாதம் முழுவதும் பல லட்சக்கணக்கான "மோனார்க்" பட்டாம்பூச்சிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து பறந்து சென்று மெக்சிகோ மிட்சோ ஆஹான் பகுதியில் உள்ள மரங்களின் உச்சியில் தங்கிவிடுகின்றன. குளிர்காலத்தை கழிக்க இந்த இடத்தை எப்படித் தேர்ந்தெடுத்தன என்பது புரியாத புதிர். இவற்றின் வருகை 1975இல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றிச் சுழலும் அழகு:
10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பட்டாம்பூச்சிகள் சுமார் 22 ஏக்கரில் மரங்களை அடைபோல் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் கடந்த சில வருடங்களாக இது 2.9 ஏக்கராக குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை துடைக்கும் வகையில் இந்த வருடம் பட்டாம்பூச்சிகள் 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதனைப் பார்த்து ரசித்துச் செல்லவென்றே சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் பட்டாம்பூச்சிகள் இவர்களை கண்டு கொள்வதேயில்லை...அவற்றின் சிறகுகளை விரித்து அழகாக பறந்து கொண்டே!