யு.எஸ்: 3 முஸ்லீம் மாணவ, மாணவியர் மத குரோதத்தால் கொல்லப்படவில்லை- போலீசார்
ராலே: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் 2 முஸ்லீம் மாணவிகள் மற்றும் 1 முஸ்லிம் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத வெறுப்பு காரணம் அல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கான் தென்கிழக்கு மாநிலமான வடக்கு கரோலினாவில் இருக்கும் சாப்பல் ஹில் பகுதியில் வசித்து வந்தவர்கள் தியா ஷாதி பரகத்(23), அவரது மனைவி யூசர் அபுசல்ஹா(21), யூசரின் தங்கை ரஸான் அபுசல்ஹா(19). பரகத் பல்மருத்துவம் படித்து வந்தார். அவரது மனைவியும், ரஸானும் இளங்கலை படிப்பு படித்து வந்தனர். அவர்களுக்கும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான கிரெய்க் ஸ்டீபன் ஹிக்ஸ் என்பவருக்கும் கார் நிறுத்தும் இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹிக்ஸ் பரகத் வீட்டிற்கு சென்று அங்கு மாணவர் மற்றும் மாணவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் அவராக சென்று போலீசில் சரண் அடைந்தார்.
மூன்று பேரும் கொல்லப்பட்டதற்கு முஸ்லீம்கள் மீது கொண்ட வெறுப்பு தான் காரணம் என்று மாணவிகளின் தந்தை முகமது அபுசல்ஹா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கொலைக்கு பார்க்கிங் பிரச்சனை தான் காரணமே தவிர மத வெறுப்பு அல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்ஸ் ஒரு நாத்திகவாதி. அவர் தனிமனித உரிமையை மதிப்பவர். இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை என ஹிக்ஸின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.
3 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சாப்பல் ஹில்லில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.