தொடர்ந்து 64 நாட்கள் வேலை... கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ரூ. 50 லட்சம் கேட்டு புத்த பிட்சு வழக்கு!
ஜப்பான் புத்த பிட்சு ஒருவர் தான் பணிபுரிந்து வரும் கோவிலுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
டோக்கியோ: ஜப்பானில் அதிக வேலைப்பளு அளித்ததாக கோவில் மீது ரூ. 50 லட்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் புத்த பிட்சு ஒருவர்.
ஜப்பானில் அதிக வேலைப்பளு தரப்படுகிறது என்பது அங்குள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களின் குற்றச்சாட்டு ஆகும். அதிக வேலைப்பளு காரணமாக அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கடந்தாண்டு மட்டும் வேலைப்பளு அதிகமாக இருப்பதாக தங்களது நிறுவனங்கள் மீது சுமார் 191க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 7 % அதிகமான தொழிலாளிகள் அங்கு 20 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைப்பதற்காக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனபோதும் இது மாபெரும் குற்றச்சாட்டாகவே தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான மவுண்ட் கோயாவில் உள்ள கோயகன் என்ற புத்தர் கோவிலில் சமையல் பணிபுரிந்து வரும் புத்த பிட்சு ஒருவர், சம்பந்தப்பட்ட கோவில் தனக்கு அதிக வேலைப்பளு அளித்ததாகவும், அதனால் தான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அக்கோவில் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள அந்த 40 வயது பிட்சு, தனக்கு அக்கோவில் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோயகன் கோவிலில் அந்த பிட்சு, கடந்த 2002ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறாராம். கடந்த 2015ம் ஆண்டு வரை தான் ஓய்வில்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்துள்ள அந்த பிட்சு, 2015-ம் ஆண்டில் கோவிலின் 1200வது ஆண்டுவிழாவையொட்டி தொடர்ந்து 64 நாட்கள் ஓய்வின்றி தன்னிடம் கோவில் நிர்வாகம் வேலை வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதனால் தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அந்த பிட்சு, எனவே தனக்கு சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகம் ரூ.50 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
வழக்கு தொடர்ந்த புத்த பிட்சுவின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட அவரது வழக்கறிஞர் நொரிடேக், மேற்கண்ட தகவல்களை ஊடகங்களில் உறுதி செய்துள்ளார்.
கோவில் நிர்வாகத்திற்கு எதிராக பிட்சு ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.