இஸ்லாமிய வரலாற்றுடன் தன்னை ஒப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்... ஏன்? எதற்கு?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இஸ்லாமிய வரலாற்றை சுட்டிக்காட்டி இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது.

கடைசி பந்து வரை ஆடுவேன்
இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியானது. ஆனால், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானோ கடைசி பந்து வரை நின்று ஆடுவேன் என தெரிவித்தார். அவர் மற்ற கட்சிகளுடனும் எம்.பிக்களுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என அறிவித்தார். வெளிநாட்டு சதி காரணமாகவே தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற சிலர் துடிப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதை அடுத்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்புகள் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இம்ரான் கானுக்கு வாய்ப்பு உள்ளதா?
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், அவரது அரசே கூட்டணிகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிகளுமே இம்ரான் கானுக்கு எதிராக நிற்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவு. ஆனால் இதை சமாளிக்க தன்னிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளதாக கூறி இருக்கிறார் இம்ரான் கான். எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்துக்கே வரவிடாமல் தடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவதே இம்ரான் கானின் திட்டம் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றுடன் ஒப்பிட்டு ட்வீட் செய்த இம்ரான் கான்
ஆட்சியை தக்க வைக்கும் தன்னுடைய முயற்சியை, இஸ்லாமிய வரலாற்றில் முஹம்மது நபியின் பேரன் ஹுசைனுக்கும், உமைய்யாக்களின் கலிபா யசீதுக்கும் இடையே நடந்த கர்பலா யுத்தத்துடன் ஒப்பிட்டுள்ளார் இம்ரான் கான். அவர் தனது பதிவில், "கர்பலாவில் நடந்த யுத்தத்தில் இமாம் ஹுசைன் அவர்கள் படைபலத்தில் அதிகம் கொண்ட எதிரிகளை எதிர்கொண்டார்கள். அவரது குடும்பத்தினரும் அவரை பின்பற்றுபவர்களும் உண்மைக்கும் பொய்யுக்கும் இடையிலான போராட்டத்தில் தங்களை தியாகம் செய்தனர்." எனப் பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications