போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது பாக். தலிபான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுடன் நடத்தி வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் பலனாக, விரைவில் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை குருசேத்ர நாடாகவும், கொடிய வன்முறை களமாகவும் மாற்றி வரும் தலிபான் தீவிரவாதிகள் ஆயுதம் மற்றும் வெடிகுண்டு கலாசாரத்துக்கு விரைவில் விடை கொடுத்து விட்டு அமைதிப்பாதையில் திரும்ப உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் பத்து வருடங்களாக வன்முறை தாக்குதல் மற்றும் கலவரங்களின் மூலம் சுமார் 40 ஆயிரம் மக்களின் உயிரை பறித்த தலிபான் தீவிரவாத இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நவாஸ் ஷெரிப் அரசு கடந்த சில தினங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால், எங்களது கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த வசிரிஸ்தானில் இருந்து ராணுவப் படைகள் வெளியேற வேண்டும். பாதுகாப்புப் படையின் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள தலிபான் அல்லாத போராளி குழுவினரை விடுதலை செய்யவேண்டும் என்றும் தலிபான்கள் அரசுக்கு நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசினால் தடை செய்யப்பட்ட தலிபான் இயக்கத்தின் ஷுரா எனப்படும் உயர்மட்ட ஆலோசனை குழு அரசின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்த முடிவை எடுக்க சம்மதம் தெரிவித்தது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் தலைமை வகிக்கும் பத்திரிகையாளர் இர்ஃபான் சித்திக்கி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினார்.
இந்நிலையில், தலிபான் போராளிகள் அநேகமாக ஓரிரு நாளில் வன்முறை பாதையை கைவிட்டு நல்ல விதமான அரசியல் பாதைக்கு திரும்பக் கூடும் என்று பாகிஸ்தானில் இருந்து நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
ரணங்களும்,வடுக்களையுமே பதிலாக அளித்து கொண்டிருந்த தலிபான்களின் இம்முடிவு ஒரு புதிய மகிழ்ச்சி சாகப்தத்தை அளிக்கும் என நிச்சயமாக தெரிகிறது.