ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. விமானத்தில் அடித்துக் கொண்ட பயணிகள்... விலக்கி விட்ட விமானி!
சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானத்தில் பயணிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அதைத் தடுத்து நிறுத்துவதற்காக விமானி தேர்ந்த அரசியல்வாதி போல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடவே, யாரும் பிற பயணிகளின் அமைதிக்கு இடையூறாக இருந்தால், அடுத்த நாள் விமானத்தில் செல்லலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சான் ப்ரான்சிஸ்கோவிலிருந்து மெக்சிகோவுக்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் அதை செல்ஃபோனில் வீடியோ படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அதில் விமானியின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து பயணிகள் கைதட்டி வரவேற்பதும் கேட்கிறது.
வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ள பயணியின் நண்பர், ஒரு பயணி இன்னொரு ஆப்ரிக்கன் அமெரிக்கப் பெண்மணியிடம், இனவெறியுடன் சில கருத்துக்கள் கூறியதாகவும் அந்த பெண்மணி அழுது கூக்குரலிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்துள்ளார்.
மற்றவர்களின் முடிவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். இந்த மூன்று மணி நேர விமானப் பயணமும், தரை இறங்கிய பிறகும் உங்களுக்கு நல்ல பொழுதாக அமையும்.
நம்முடைய கருத்துக்களை நம்மிடம் வைத்துக்கொள்வோம். குறிப்பாக இந்த மேட்டர் பற்றி இந்த நேரத்தில் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க வேண்டாம்.
அமைதியாக இருக்கும் நேரத்தில் நாம் பேசலாம், நாம் எல்லோருமே மனிதப் பிறவிகள் என்ற உண்மையையும் உணரலாம். எல்லோரும் இணைந்தும் இருக்கலாம்.
யாருக்காவது இதில் பிரச்சனை இருக்கும் என்றால், அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக இருந்தால், உங்களுக்கான விமானம் நாளைக்கு காத்திருக்கிறது என்று அறிவித்துள்ளார்.
பெரும்பாலோன பயணிகள் கைத்தட்டி விமானியின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். எந்த வித அசம்பாவிதமின்றி விமானம் குறிப்பிட்ட இலக்கை அடைந்துள்ளது.
30ஆயிரம் அடிக்கு மேலே போனாலும் அரசியல் படுத்தும் பாடு பெரும்பாடுதான்.. விமானி எச்சரித்ததால் அடிதடி இல்லாமல் தரை இறங்கியிருக்காங்களே.. அதுவே பெரும் சாதனைதான்!
-இர தினகர்