லஞ்சம் வாங்கிய ரோமன் அதிபரின் சகோதரர் கைது
புச்சரெஸ்ட்: ஜெயில் கைதிகளின் தண்டனையை குறைப்பதாக கூறி லஞ்சம் பெற்றதாக, ரோமானிய நாட்டு அதிபரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோமானிய அதிபராக பதவி வகிப்பவர் டிரையான் பேஸ்கு. இவரது சகோதரர் மிர்சியா பேஸ்கு. தனது சகோதரர் நாட்டின் அதிபர் என்பதால், சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு செய்ய தான் சிபாரிசு செய்ய முடியும் என்று கூறி, பணம் பறித்து வந்துள்ளார் மிர்சியோ. இப்படித்தான் சமீபத்தில் சான்டு அன்கேல் என்ற கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையிலுள்ளவருக்கு தண்டனை குறைப்பு செய்வதாக கூறி அவரது குடும்பத்தாரிடம், 250,000 யூரோக்களை லஞ்சமாக பெற்றுள்ளார். இது 340,000 அமெரிக்க டாலர்களாகும்.
லஞ்சம் பெற்றதை மிர்சியோ ஒப்புக்கொண்டது போன்ற வீடியோ காட்சிகள் அந்த நாட்டு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை போலீசார் மிர்சியோவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் விவகாரத்தில் தலையிடப்பவோதில்லை என்று அதிபர் அறிவித்துவிட்டார்.