"ஒரு ஈ கூட தப்பாது.. ஜாக்கிரதை!" பாய்ந்து வரும் அதிபர் புதின்! மரியுபோலை இழந்து நிற்கும் உக்ரைன்
மாஸ்கோ: உக்ரைன் போர் பல வாரங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உக்ரைன் நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது.
5 சம்பவங்கள்.. ஆளுநர் டெல்லி போன நேரம் பார்த்து.. அதிமுக செய்த பெரிய மூவ்.. உற்று பார்க்கும் திமுக!
உக்ரைன் போர் தொடங்கிய சமயத்திலேயே இரு தரப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இருப்பினும், அதில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை.
உக்ரைன் போர்
இதனால் போர் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், துருக்கியில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர். இதில் இரு தரப்பிற்கும் இடையே பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியைக் கைவிட உக்ரைன் ஒப்புக் கொண்டது. அதேபோல உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்க ரஷ்யாவும் ஒப்புக் கொண்டது. இருப்பினும், ரஷ்யா பகுதிகளில் உக்ரைன் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது.
மரியுபோல்
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ரஷ்யா, மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. குறிப்பாக, துறைமுக நகரமாக மரியுபோலை குறி வைத்த ரஷ்யா கடந்த சில நாட்களாகவே தீவிரமாகத் தாக்குதல் நடத்தியது. பல வாரச் சண்டைக்குப் பின்னர், ஒரு வழியாக மரியுபோல் நகரை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரு மாத போருக்குப் பின்னர் துறைமுக நகர் மரியுபோல் "விடுதலை" பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் உக்ரைன் போரைத் தொடர்வது குறித்தும் அவர் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் திட்டம்
புதின் உடனான ஒரு தொலைக்காட்சி சந்திப்பில் "மரியுபோல் விடுவிக்கப்பட்டதாக என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு புதினிடம் குறிப்பிட்டார். மீதமுள்ள படைகள் அசோவ்ஸ்டல் ஆலையின் தொழில்துறை மண்டலத்தில் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளது" என்றார். இதன் மூலம் மரியுபோல் நகருடன் ரஷ்யா தனது போரை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வட உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈ கூட தப்பிக்காது
அந்த நேர்காணலில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் படைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறுகையில், "மரியுபோல் நகரை விடுதலை செய்த ரஷ்யப் படைகளுக்கு வாழ்த்துகள். இது நமக்குக் கிடைத்துள்ள வெற்றி. அடுத்து அங்குள்ள தொழில்துறை பகுதிகளைக் குறி வைத்துள்ளோம். இந்த பகுதிகளில் இருந்து ஒரு ஈ கூட தப்பிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
போரீஸ் ஜான்சன்
அதேநேரம் உலக நாடுகள் உக்ரைனுக்குத் தரும் ஆதரவைத் தொடர்ந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் தான் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கீவ் நகருக்குச் சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போரில் வெற்றி பெற முடிந்த அனைத்து உதவிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் செய்யும் என்று உறுதி அளித்திருந்தார்.
Recommended Video
உலக நாடுகள்
அதன் பின்னர் ஸ்பெயின் மற்றும் டென்மார்க் பிரதமர்கள் கீவ் நகருக்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவை அளித்திருந்தனர். ரஷ்யாவை எதிர்த்து சுமார் 2 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. அதேநேரம் உக்ரேனிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை என்றும் உலக நாடுகள் தங்கள் ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.