மின்னல் தாக்கவில்லை, பலத்த காற்று வீசியதால்தான் கிரேன் விழுந்தது... சவுதி அதிகாரி தகவல்
ரியாத்: மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் விழுந்த விபத்துக்கு மிக மிக பலத்த காற்று வீசியதே காரணம் என்றும், மின்னல் தாக்கி கிரேன் விழவில்லை என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்காவில் உள்ள புனிதமான பெரிய மசூதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மிகப் பெரிய ராட்சத கிரேன் விழுந்து நொறுங்கியதில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 2 இந்திய ஹஜ் யாத்ரீகர்களும் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த காற்றே காரணம்
சவுதி அரேபியா சிவில் பாதுகாப்புத்துறை இயக்குநர் சுலேமான் பின் அப்துல்லா அல் அம்ரோ கூறுகையில், வரலாறு காணாத வகையில் வீசிய மிக பலத்த காற்று காரணமாகவே கிரேன் உடைந்து கீழே விழ முக்கியக் காரணமாகும்.
மின்னல் தாக்கவில்லை
மின்னல் தாக்கியதால் கிரேன் உடைந்ததாக கூறப்படுவது தவறானதாகும். காற்று மிக மிக பலமாக வீசியதே இதற்குக் காரணம். அக்கம் பக்கத்தில் உள்ள பல மரங்களும் கூட பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்துள்ளதை வைத்து இதை உணரலாம் என்றார்.
நெரிசலில் சிக்கி பலர் பலி
உண்மையில் கிரேன் விழுந்து கட்டடம் இடிந்து சரிந்ததில் பலர் பலியானார்கள் என்ற போதிலும், அந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து மக்கள் அங்குமிங்கும் ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கித்தான் பலர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் அதையே காட்டுகிறது.
அமெரிக்கா இரங்கல்
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான இடத்தில் நடந்துள்ள இந்த மிகத் துயரமான சம்பவத்தில், சவுதி அரசுடனும், மக்களுடனும் அமெரிக்காவும், அதன் மக்களும் துணை நிற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 22 முதல்
புனித ஹஜ் யாத்திரை செப்டம்பர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக இதுவரை பல்வேறு நாடுகளிலிருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் யாத்ரீகர்கள் ஏற்கனவே வந்து குவிந்துள்ளனர்.