இங்கிலாந்திடமிருந்து "ஆன்லைன் சுதந்திரத்தை" பெற்றது ஸ்காட்லாந்து!
லண்டன்: ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா என்ற பொதுத் தீர்மான வாக்கெடுப்பு தோல்வியடைந்து ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இணையதளத்தில் இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றுள்ளது ஸ்காட்லாந்து.
அதாவது இதுவரை .uk என்று பயன்படுத்தி வந்த டொமைன்களை தற்போது .scot என்ற டொமைன்களுக்கு மாறியுள்ளது ஸ்காட்லாந்து அரசு. இங்கிலாந்து அரசின் துறைகள் அனைத்தும் தற்போது .uk என்ற டொமைனைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஸ்காட்லாந்து அரசு துறைகளும் கூட இதையே பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் தற்போது இதை ஸ்காட்லாந்து அரசு மாற்றியுள்ளது.
புதிதாக .scot என்ற டொமைனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து அரசின் முக்கிய இணையதளத்தின் பெயர் www.gov.scot என்று மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்காட்லாந்து முதல் துணை பிரதமர் ஜான் ஸ்வின்னி கூறுகையில், நாங்கள் ஸ்காட்டிஷ் என்பதை முதன்மைப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அளவில் ஸ்காட்லாந்து மக்கள் இந்த டொமைனைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
.scot டொமைனை இதுவரை 8000 பேர் பயன்படுத்தி வருகின்றனராம். ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும் எ்ன்ற கோரிக்கையை தொடர்ந்து முன்னடத்தி வரும், முன்னாள் அமைச்சர் அலெக்ஸ் சல்மாண்ட்தான் முதன் முதலில் தனி டொமைன் யோசனையைச் சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா அல்லது கிரேட் பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் 55 சதவீதம் பேர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று வாக்களித்தனர் என்பது நினைவிருக்கலாம்.