சிட்னி ஹோட்டல் முற்றுகை: ”லோன் உல்ப்” என்னும் தனிமனித தீவிரவாதத்தின் மறு உருவம்
சிட்னி: லோன் உல்ப் டெரரிசம் எனப்படும் தீவிரவாதத்தின் ஒரு உருவத்தின் இன்னொரு நினைவுபடுத்தலாக சிட்னி முற்றுகை நடந்துள்ளது. குழுத் தீவிரவாதத்தை இந்த தனி மனித தீவிரவாதம்தான் மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற தீவிரவாத செயல்களை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.
கிளாஸ்கோவில் கலீல் அகமது நடத்திய தீவிரவாதம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதுதான் இதுபோன்ற தனி மனித தீவிரவாதத்தின் தொடக்கம் என்று கூடச் சொல்லலாம். இந்த தனி மனித தீவிரவாதம் எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதை ஆராய்வோம்.
தனி மனித தீவிரவாதம் என்பது ஒரு நபர் தனியாக, தீவிரவாத செயலில் ஈடுபடுவது என்பதாகும். ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, அதன் சித்தாங்களால் கவரப்பட்ட ஒரு நபர் அதில் இணையாமல் தனித்து செயல்படுவதே இந்த லோன் உல்ப் டெரரிசமாகும்.
இதுபோன்ற தனி மனித தீவிரவாத நபர்களால் பல தீவிரவாத குழுக்களுக்கும் பைசா செலவில்லாமல் லாபம் கிடைக்கிறது. அவர்களது நோக்கம், செயல்பாடுகளை பிறரிடம் இலவசமாக பரப்புவதற்கும் உதவுகிறது.
கலீல் அகமது விவகாரம்:
பெங்களூரைச் சேர்ந்த கலீல் அகமது கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தகர்க்க நினைத்தார். முயற்சித்தார். அவர் ஆன்லைன் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டவர். அவர் எந்த தீவிரவாத அமைப்பையும் சேராதவர். ஆனால் அல் கொய்தாவின் சித்தாந்தம் அவரைக் கவர்ந்தது. அவரே ஆன்லைன் மூலம் வெடிகுண்டு செய்யக் கற்றுக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக அவருடைய முயற்சி வெற்றி பெறாமல் போய் விட்டது. குண்டு வெடிக்காமல் போய் விட்டது.
எமர்சன் பெகோலி - ஷோகர் தஸ்ரனேவ்:
இவர்களும் தனித்து செயல்பட்டவர்களே. சுயமாக தீவிரவாத எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர்கள். பெகோலி, ஆன்லைனில் மிகத் தீவிரமாக தீவிரவாத விஷயங்களைத் தேடிக் கற்றவர். அமெரிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் எதிராக மிகத் தீவிரமான ஆன்லைன் பிரசாரத்தை மேற்கொண்டவர் பெகோலி. ஆன்லைனில் மிகத் தீவிரமாக செயல்படும் தீவிரவாதி என்ற பெயரையும் பெற்றவர்.
இவர்கள் அனைவருமே ஆன்லைன் மூலம் தீவி்ரவாத எண்ணம் கொண்டவர்களாக வளர்ந்தவர்கள். எந்தத் தீவிரவாத அமைப்புடனும் சேராமல், நேரடியாகப் போய் பயிற்சி பெறாமல் தீவிரவாத எண்ணத்தை வளர்த்தவர்கள்.
இது எப்படி தீவிரவாத அமைப்புகளுக்கு பலன் தரும்:
ஆன்லைனில் தொடர்ந்து தம்மைப் பற்றி ஏதாவது செய்தி வருவதையே இந்த தீவிரவாத அமைப்புகள் விரும்புகின்றன. இதுபோன்ற செய்திகளை மக்கள் குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர்கள் விரு்புகிறார்கள்.
முன்பு போல இவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் முன்பை விட கெடுபிடியாக மாறியுள்ளன. எனவேதான் இதுபோன்ற தனி மனிதர்களை அதிகம் நம்பியுள்ளன தீவிரவாத அமைப்புகள். இவர்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்காது. ஆனால் அந்தத் தீவிரவாத அமைப்புகளின் சித்தாதங்களை இந்த தனி மனிதர்கள் கொண்டு செல்கிறார்கள்.
குறைந்தி சக்தி.. அதிக அபாயம்:
இதுபோன்ற தனி நபர்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் குறைந்த சக்தி கொண்டவையாகவே இருக்கும். மும்பை பயங்கரவாத தாக்குதல் என்பது ஒருங்கிணைந்த நடவடிக்கை. எனவே அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் தனி மனித தீவிரவாதம் அப்படி அல்ல.
சிட்னி சம்பவம் இதற்கு உதாரணம். மும்பையில் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்திய தீவிரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பை விட சிட்னியில் ஏற்பட்ட இழப்பு மிகக் குறைவானதே. ஆனால் இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. அந்தத் தீவிரவாதி காட்டிய கருப்புக் கொடி உலகம் முழுவதும் பரவி விட்டது.
உளவு அமைப்புகளுக்கு இதுபோன்ற தனி மனிதர்களைக் கண்டுபிடிப்பது என்பது மிகக் கடிமான பணியாகும். சிட்னி சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பெரிய தீவிரவாத அமைப்புகள் தாக்கி விடாமல் இருக்க வேண்டுமே என்றுதான் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த உளவு அமைப்புகளும் கவனமாக இருந்தன. ஆனால் ஒரு தனி மனிதர் அந்த நாட்டை தூங்க விடாமல் செய்து விட்டார்.
இதுபோன்ற தனி மனித தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதும், தகவல் சேகரிப்பதும் மிகவும் கடினமானது. யாரும் இவர்களை ஒருங்கிணைப்பது இல்லை, வழி நடத்துவது இல்லை. அவர்களாகவே இலக்குகளை நிர்ணயித்து செயல்படுகிறார்கள். எனவே முன்கூட்டியே இவர்களைத் தடுப்புதும் இயலாத காரியமாகும்.