கடத்தப்பட்ட 44 அமைதிப் படையினரை மீட்க கோலன் குன்றுகளில் சிரியா உக்கிர தாக்குதல்!!
டமாஸ்கஸ்: சிரியாவில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 44 அமைதிப் படையினரை மீட்பதற்காக கோலன் குன்றுப் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் முன்னேறி வருகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் சிரியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றியது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் அந்நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் சிரியாவின் கோலன் குன்றுப் பகுதியில் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அமைதிப் படையினர் 44 பேரை அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்கள் அனைவரும் பிஜி நாட்டவர்.
ஐ.நா. அமைதிப் படையினர் கடத்திச் செல்லப்பட்டதால் சர்வதேச சமூகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 44 அமைதிப் படையினரையும் விடுதலை செய்ய சில நிபந்தனைகளையும் அந்த தீவிரவாத இயக்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் அமைதிப் படையினரை பாதுகாப்பாக மீட்பதற்காக கோலன் குன்று பகுதிகளில் சிரியா ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகிறது. இதற்கு எதிராக அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அமைதிப் படையினரை பாதுகாப்பாக மீட்க கத்தார் நாடு தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.