லண்டன் விபத்தில் பெற்றோர் பலி.. 5 வயது மகள் உயிருக்கு போராட்டம்.. விரையும் உறவினர்கள்!
லண்டனில் நடந்த கொடூர சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 5 வயது பெண்குழந்தை அநாதரவான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : லண்டனில் நடந்த விபத்தில் தாய், தந்தையை இழந்த 5 வயது சிறுமி ஷ்ரவந்தி உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது உறவினர்கள் அவசர விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே பக்கிங் ஹாம்ப்ஷயர் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியும், சிற்றுந்தும் எதிர்ப்பாராத விதமாக மோதிக் கொண்டன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், வாகனங்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய நால்வர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர்கள் இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அநாதையான 5 வயது சிறுமி
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் நடந்துள்ள இந்த கொடூர சாலை விபத்தில் 5 வயது சிறுமி ஷ்ரவந்தி அநாதையாகி உள்ளார். இவருடைய தந்தை கார்த்திகேயன் ராமசுப்ரமணியம் மற்றும் லாவண்யா லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடி வரும் ஷ்ரவந்திக்கு பர்மிங்கம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பார்த்துக் கொள்ள ஆள் இல்லை
அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தையை பார்த்துக்கொள்ள அங்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் தங்களுக்கு அவசர விசா வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தையின் உறவினர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து ஷ்ரவந்தி குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர் சாய்ஷங்கர் ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் " நாங்கள் அவசர விசாவிற்கு விண்ணப்பித்துள்ளோம், இன்று லண்டன் புறப்பட உள்ளோம்.
விரையும் உறவினர்கள்
எப்படி இந்த சூழலை சமாளிப்பது என்றே தெரியவில்லை. லண்டனில் இருக்கும் ஒரு குடும்பத்திடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளோம். விப்ரோவில் பணியாற்றிய கார்த்திகேயன் ராமசுப்ரமணியன் ஓராண்டுக்கு முன்னர் தான் லண்டன் சென்றார். இந்நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்துள்ளதால் இறந்தவர்களின் உடலை தமிழகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு குடும்பமும் விரைகிறது
இதேபோல பன்னீர்செல்வத்தின் மருமகன் டாக்டர். ஷங்கர் மாமனாரின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விசா கிடைத்ததும் லண்டன் செல்ல உள்ளதாகவும், இதற்கான செலவை அந்த நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக தமிழ் சங்கம் உதவி
லண்டனில் உள்ள உலக தமிழ் சங்கம் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. விப்ரோவில் பணியாற்றி வரும் மற்றொரு ஊழியரான மனோ ரஞ்சன் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளனர். எனினும் மனோ ரஞ்சனின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் அருட்செல்வன், தமிழ்மணி உள்ளிட்டோர் பலியாகியுள்ளனர்.