'நீட்'டுக்கு கடல்கடந்து வலுக்கும் எதிர்ப்பு... ஆஸ்திரேலியா, ஈராக் தமிழர்கள் போராட்டம்!
நீட் தேர்வு பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்பதால் இந்தியாவிற்கே இது தேவையில்லை என்று கடல் கடந்து வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னி : நீட் தேர்வு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிற்கே வேண்டாம் என்று வலியுறுத்தி ஆஸ்திரேலியா மற்றும் ஈராக்கில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் குழுமூரைச் சேர்ந்த 16 வயது மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு நிரந்தரமாக தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் போராட்டம் வலுபெற்று வருவதால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
அனிதாவின் மரணத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக அமெரிக்காவின் மிக்சிகன், சிலிகான் வேலி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும தமிழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிட்னியில் போராட்டம்
இந்நிலையில் சிட்னியின் இந்திய தூதரக அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் படத்தை கையில் ஏந்தி போராடியவர்கள் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்றும் அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
நீதி வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகப் பெண் ஒருவர் கூறும்போது, இந்தியா முழுவதும் அதே கல்வித் தரம் இருக்கிறதா என்பதை ஆராயாமல் நீட் தேர்வை கொண்டு வந்தது சரியல்ல. அனிதாவின் மரணத்தில் உள்ள நீதியை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.
மாநில உரிமை வேண்டும்
மாநிலத்தின் கல்வி உரிமையை மத்திய அரசு பறிப்பதாக வெளிநாட்டில் பணியாற்றி வரும் தமிழர் தெரிவித்துள்ளார். தமிழகம் வளர்ந்து விட்ட மாநிலம் 25க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. பொதுக்கல்வி முறை மாநில அரசின் கையில் இல்லாமல் மத்திய அரசின் கையில் இருப்பது வெட்கக்கேடானது, 1959ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையாலேயே நான் படித்து இப்போது வெளிநாட்டில் பணியாற்றி வருகிறேன் என்றார்.
வணிகமயமாகிவிடும்
இதே போன்று நீட் தேர்வு தடைக்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய வாழ் தமிழர் பகிர்ந்த தகவலில் கூறியதாவது : கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு வேண்டவே வேண்டாம். இந்தியா முழுவதுமே நீட் தேர்வு வேண்டாம், பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறப்படுகிறது, ஆனால் கிராமப்புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பின்தங்கியே தான் உள்ளனர். நீட் தேர்வு எழுதாமேல தரமான மருத்துவர்கள் இப்போது வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நீட் தேர்வு வந்தால் தற்போது சேவைத் துறையாக இருக்கும் மருத்துவம் வணிகமாக மாறி விடும் என்பதே எங்களின் அச்சம், என்றார்.
ஈராக்கிலும் போராட்டம்
மேலும் ஈராக்கில் தமிழர்களும் அனிதாவிற்காக போராட்டம் நடத்தினர். பணிக்கு நடுவே அலுவலக வாசலில் வந்து நின்று அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், நீட் வேண்டாம் என்றும் கோஷமிட்டனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராடியது போல, வெளிநாடு வாழ் தமிழர்கள் தற்போது நீட்டுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.