தீவிரவாதம் என்பது மனித குலத்திற்கான அச்சுறுத்தல்: பிரஸ்ஸல்ஸில் மோடி பேச்சு
பிரஸ்ஸல்ஸ்: தீவிரவாதம் என்பது நாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல, மனித குலத்திற்கான அச்சுறுத்தல் என்று பிரஸ்ஸல்ஸில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பெல்ஜியம் சென்றடைந்தார்.

தற்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள எக்ஸ்போ அரங்கில் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது: தீவிரவாதத்தால் சுமார் 90 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் தாக்குதலில் ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதம் என்பது ஒரு நாட்டுக்கான அச்சுறுத்தல் இல்லை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கான அச்சுறுத்தல் அதனை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

இந்தியா தீவிரவாதத்தை எதிர்த்து கடந்த 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது. மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தீவிரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னரே உலகம் தீவிரவாதத்தை பற்றி உணரத் தொடங்கின.
எந்த மதமும் தீவிரவாதத்தை கற்றுக்கொடுப்பதும் இல்லை. அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை. தீவிரவாதத்திற்கும் எந்த மதத்திற்கும் தொடர்பு கிடையாது. உலக நாடுகள் அனைத்தும் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பொருளாதார முன்னேற்றத்தில் நம்பிக்கையின் ஒளி இந்தியா என்று அனைவரும் பாராட்டும் விதமாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

தற்போது ஒவ்வொரு நாடும் இந்தியாவில் நிலவும் பொருளாதார மேம்பாட்டை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்க முடியதாவற்றை சமூக வலைதளங்கள் மூலம் பார்க்கலாம். உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கின்றன.
இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மானியங்களை ஒழுங்குபடுத்தியதால், மானியங்கள் சரியான நபர்களை சென்றடைகிறது. பிரதம மந்திரி வங்கிக் கணக்கு திட்டம் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சாமானியர்களுக்கும் வங்கிக் கணக்கு சாத்தியமாகி உள்ளதால், எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு வருவதற்குள் அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சிலர் வங்கிக் கடன் வாங்கியவுடன் விமானத்தில் பறந்து விடுகிறார்கள்.
தீவிரவாதத்தின் தீவிரத்தை இந்தியாவின் அண்டை நாடுகள் புரிந்து கொள்ள மறு்க்கிறது. அதற்காக நமது அண்டை நாடுகளை மாற்ற முடியாது. இவ்வாறு மோடி கூறினார்.
Terrorism is not a challenge for a nation, it is a challenge for the entire humanity: PM #ModiInBrussels
— ANI (@ANI_news) March 30, 2016












Click it and Unblock the Notifications