இப்போல்லாம் ட்ரம்ப் ரொம்ப சமத்துப் பிள்ளை ஆயிட்டாரு … தெரியுமா ?
வாஷிங்டன்(யு.எஸ்). அர்த்த ராத்திரியில் ட்விட்டரும் கையுமா இருந்த டொனால்ட் ட்ரம்ப், இப்போல்லாம் டுவிட் பண்ணுறதே இல்ல.அவருடன் வெவ்வேறு பெண்களுக்கு தொடர்பு என்ற செய்தி வெளியான போதெல்லாம், நடு நிசி தாண்டியும் கூட டுவிட்டரில் கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.
ஹிலரி க்ளிண்டனின் அரசியல் பேச்சுக்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக சரவெடியாக ட்விட்டுகள் வந்து கொண்டே இருக்கும். ட்ரம்பின் டுவிட்டுகள் பெரும்பாலும் நள்ளிரவு தாண்டி அதிகாலை மூன்று மணிக்குள்தான் வரும்.
அவர் ட்விட்டுகளை விட, எத்தனை மணிக்கு டுவிட் செய்தார் என்பதே ஒரு விவாதப் பொருளாக மாறிவிடும். அப்பேர்ப்பட்ட ட்ரம்ப், அர்த்தராத்திரி டுவிட் பண்ணுவதில்லை. எடக்கு மடக்காக கருத்து சொல்வதில்லை என்பது ஆச்சரியம் தானே!
அது மட்டுமல்ல.. ஹிலரியை டெலிப்ராம்ப்டர் பார்த்துப் பேசுபவர், சொந்தக் கருத்து இல்லாதவர் என்றெல்லாம் விளாசிய ட்ரம்ப், இப்போ டெலிப்ராம்ப்டரில் வரும் முன்கூட்டி யாரோ தயார் செய்தப் பேச்சுக்களைத்தான் பேசுகிறார். இதே ட்ரம்ப்தான் தனக்கு டெலிப்ராம்டர் சரிவராது என்று மேடையிலேயே தூக்கி கடாசியவர்.
இப்போது தயார் செய்த பேச்சைத்தான் பேசுகிறார் என்பதால் எந்த புதிய சர்ச்சைகளும் வருவதில்லை. உச்சக்கட்டமாக, எந்த மாடலை பன்றி என்று வர்ணித்தாரோ? அவர் ஃப்ளோரிடாவில் ஹிலரியை அறிமுகம் செய்து வைத்து ட்ரம்பை கடுமையாக தாக்கிப் பேசினார்.
பழைய ட்ரம்பாக இருந்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அதிரடியான ட்விட் வந்து இருக்கும். அல்லது மேடையில் ஊர்வலத்தில் வசை பாடியிருப்பார்.
அப்படி இருந்த ட்ரம்ப் ஏன் இப்படி மாறினார்?.
ஆன் த ஸ்பாட், அதிரடி தாக்குதலுக்குப் பெயர் போன ட்ரம்ப் எப்படி இப்படிப் பெட்டிப் பாம்பாகிப் போனார்?. மருமகன்தான் முக்கிய காரணம். மகள் இவாங்கா வின் கணவரின் கண் அசைப்பில் தான் இப்போது ட்ரம்ப் செயல்படுகிறார்.
புலனாய்வுத் துறை அதிகாரி ஜேம்ஸ் கோமியின் கடிதம் ட்ரம்புக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், கோமி அவை உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஹிலரியின் சர்வர் தொடர்பான இமெயில் சர்ச்சை கடிதம், ட்ரம்பின் துருப்புச்சீட்டு ஆகி விட்டது.
ஹிலரி குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டவர். தேர்தலை ரத்து செய்து விட்டு என்னை அதிபர் ஆக்கவேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் பேசி வருகிறார்.
கடும் போட்டி நிலவும் மாநிலங்களில், அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார்போல் உள்ளூர் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இமெயில் சர்ச்சை தொடர்பான கடிததற்கு அதிபர் ஒபாமா உட்பட பல முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்தவாறு உள்ளனர்.
மிகவும் பின் தங்கி இருந்த ட்ரம்புக்கு, தற்போது வெற்றியை தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், ட்விட்டரில் ஏதாவது ஏடாகூடாமாகப் பேசி காரியத்தை கெடுத்துவிடக் கூடாது என உடன் இருக்கும் மருமகன் கடிவாளம் போட்டுள்ளார். அதைப் போல் இஷ்டத்திற்கு மேடையில் பேசக் கூடாது, எழுதிக் கொடுக்கும் பேச்சை டெலிப்ராம்டரில் பேசிவிட்டு இறங்கி விட வேண்டும் என்ற கட்டளையும் போடப்பட்டுள்ளதாம்.
ஆக, தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், ட்ரம்ப் ரொம்ப சமத்துப் பிள்ளை ஆகிவிட்டார். ஆனாலும் அவருடைய வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-இர தினகர்