மாயமான எம்.ஹெச்.370, ஏர் ஏசியா: ஒற்றுமையும், வித்தியாசமும்
ஜகர்தா: மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மற்றும் ஏர் ஏசியா விமானம் ஆகியவை மாயமான போதிலும், அவை மாயமான காரணம் வேறு வேறாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. அதன் பிறகு அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அதே போன்று 162 பேருடன் இந்தோனேசியாவில் உள்ள சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசியா கடலில் விழுந்துவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு விமானங்கள் மாயமான நிலையில் அவை பற்றி சில விவரங்கள் இதோ,
ஏர் ஏசியா
அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் போன்று ஏர் ஏசியா நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி இல்லை. ஏர் ஏசியா நிறுவனத்திடம் உள்ள 80 விமானங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாயமான விமானம் 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த விமானம் ஏர்பஸ் 320-200 வகையைச் சேர்ந்தது. உலகிலேயே அதிக அளவில் ஏர்பஸ் விமானத்தை இயக்குவது ஏர் ஏசியா தான். மாயமான மலேசிய விமானம் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது போயிங் 777-200 வகையைச் சேர்ந்தது.
எம்.ஹெச். 370
எம்.ஹெச். 370 மாயமானபோது வானிலை நன்றாக இருந்தது. ஆனால் ஏர் ஏசியா மாயமானபோது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு விமானங்களில் இருந்தும் சிப்பந்திகள் அபாய அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் ஏர் ஏசியா விமானிகள் ஜகர்தாவில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வானிலை மோசமாக இருப்பதால் 32 ஆயிரம் அடியில் இருந்து 38 ஆயிரம் அடியில் பறக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
தகவல்கள்
ஏர் ஏசியா விமானத்தில் உள்ள கம்பூப்யூட்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அவ்வப்போது தகவல்கள் வந்துள்ளன. அந்த தகவல்களை இந்தோனேசியா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் மலேசிய விமானத்திலோ யாரோ அதன் தகவல் தொடர்பு சாதனங்களை சுவிட் ஆப் செய்துவிட்டனர்.
விமானிகள்
மலேசிய விமானத்தின் கேப்டன் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் 18 ஆயிரம் மணி நேரமும், துணை விமானி 2 ஆயிரத்து 700 மணிநேரமும் விமானங்களை ஓட்டியுள்ளனர். ஆனால் ஏர் ஏசியா விமான கேப்டன் 6 ஆயிரத்து 100 மணிநேரமும், துணை விமானி 2 ஆயிரத்து 275 மணிநேரமும் விமானத்தை ஓட்டியுள்ளனர்.
இந்தோனேசிய கடல்
ஏர் ஏசியா விமானம் இந்தோனேசியா கடலில் விழுந்துவிட்டது என்று கூறி அதை தேடும் பணி துவங்கியுள்ளது. இந்த விமானத்தின் பாகங்களாவது கிடைக்குமா அல்லது இதுவும் மலேசிய விமானம் போன்று புதிராகிவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள்.