மலேசிய விமானத்தை தேடி கடலடியை நோக்கி ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்
பெர்த்: மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கடல் தரை பரப்பில் தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் ஆயுள் முடிந்துவிட்டது. இதையடுத்து அதில் இருந்து வந்த சிக்னல்களும் அடங்கிவிட்டன. இதனால் நீருக்கு அடியில் சென்று கருப்புப் பெட்டியை தேட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடலின் தரை பகுதியில் கருப்புப் பெட்டியை தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அந்த கப்பலில் சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி சத்தத்தை வைத்து படங்களை உருவாக்கும். இந்த கப்பல் கடலின் தரை மட்டத்தை அடைய 2 மணிநேரம் ஆகும். கப்பல் கடலின் தரைப் பகுதியில் 16 மணிநேரம் தேடல் நடத்திவிட்டு மேல்பரப்புக்கு வரும். அது எடுக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்து ஆய்வு செய்ய 4 மணி நேரம் ஆகும்.
இந்த கப்பல் இன்று மதியம் கடலின் தரை பகுதிக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.