விண்வெளியில் 43 துண்டுகளாக வெடித்து சிதறியது அமெரிக்காவின் ராணுவ செயற்கை கோள்!
வாஷிங்டன்: அமெரிக்கா ராணுவத்துக்குச் சொந்தமான செயற்கைக் கோள் ஒன்று விண்வெளியில் 43 துண்டுகளாக வெடித்து சிதறியுள்ளது.
அமெரிக்கா பாதுகாப்புத் துறையானது 1995ஆம் ஆண்டு DMSP-F13 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியிருந்தது. வானிலை மாற்றங்களை ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வந்தது இந்த செயற்கைக் கோள்.
பூமிக்கு மேலே 800 கி.மீ. தொலைவில் இது வலம் வந்து கொண்டிருந்தது. 20 ஆண்டுகளாக விண்வெளியில் வலம் வந்த இந்த செயற்கைக் கோளின் முக்கிய பாகம் திடீரென ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தால் செயலிழந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 3-ந் தேதியன்று இந்த செயற்கைக் கோள் வான்வெளியிலேயே 43 துண்டுகளாக உடைந்து சிதறியது.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு DMSP- F11 என்ற செயற்கைக்கோள் 13 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் பழுதடைந்து வான்வெளியிலேயே 56 துண்டுகளாக வெடித்து சிதறியிருந்தது.
ஆனால் அந்த செயற்கைக் கோள் வெடித்து சிதறும் போது நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.