பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பியதால் விக்னேஸ்வரன் காரில் 3 மணி நேரம் தவிப்பு
யாழ்பாணம்: காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசல் நிரப்பியதால் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணிநேரம் காத்திருக்க நேரிட்டது.
இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இலங்கை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன்பிறகு யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் லிஜேடி கூட்டம் நடந்தது. இதில் விக்னேஸ்வரன் கலந்துகொண்ட பின்பு காரில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டு இருந்தார்.
வழியில் வவுனியாவில் காரில் எரிபொருள் நிரப்புவதற்காக அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அந்த காருக்கு 60 லிட்டர் டீசல் நிரப்பினார்கள்.
அப்போது ஏதேச்சையாக டிரைவர் கவனித்தபோது அந்த காருக்கு பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பியதை கண்டுபிடித்தார். இதையடுத்து கார் மெக்கானிக் அழைத்து வரப்பட்டார்.
அவர் காரின் பெட்ரோல் டேங்கை கழற்றி அதில் இருந்த டீசலை வெளியேற்றி டேங்கை சுத்தம் செய்தார். பின்னர் டேங்க் மீண்டும் காரில் பொருத்தி அதில் பெட்ரோல் நிரப்பப்பட்டது. இதற்கு 3 மணி நேரம் ஆனது. 3 மணி நேரம் விக்னேஸ்வரன் பெட்ரோல் பங்க்கில் பொறுமையுடன் காத்திருந்தார். இந்த தவறுக்காக அவர் யார் மீதும் கோபப்படவும் இல்லை. இதுபோன்ற தவறுகள் நடப்பது சகஜம்தான் என தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications