நடுவானில் பழுதான லேண்டிங் கியர் - ஊசலாடிய 447 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ”சூப்பர் ஹீரோ” விமானி!
கட்விக்: ஏர் ஏசியா விமான விபத்தின் தாக்கம் அடங்குவதற்குள்ளாக இன்று லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகளுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரக ஜம்போ வி.எஸ் 43 விமானம் அதிர்ஷடவசமாக பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.
விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.44 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் வேகாஸுக்குப் புறப்பட்டது.
இந்த நிலையில், 12.15 மணிக்கு அதன் லேண்டிங் கியர் பழுதானது விமானிக்கு தெரிய வந்ததால் உடனடியாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்து விடடு, 1.45 மணிக்கு டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் பயணிகளிடம் விளக்கமாகக் கூறினார்.
அதிர்ச்சியடைந்த பயணிகள்:
இதைக் கேட்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். பின்னர் விமானி அங்குள்ள கடற்பகுதியைச் சுற்றி வந்து விமானத்தின் எரிபொருளை காலி செய்தார்.
எடையைக் குறைத்த விமானி:
இதன் மூலம் விமானத்தின் எடை குறைந்தது. பின்னர் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கும் விமானத்தின் உயரத்தையும், வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார்.
அதிர்ந்த விமானம்:
மொத்தம் உள்ள 4 லேண்டிங் கியர்களில் ஒரு லேண்டிங் கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.
சரியாக லேண்ட் ஆன விமானம்:
இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் விமானம் சரியாக ஓடுதளத்தில் இறங்கியது. அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர்.
உணர்ச்சிப் பெருக்கில் பயணிகள்:
உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய விமானியை பாராட்டினர். நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தன்னடக்கத்துடன் பேச்சு:
ஆனால், அந்த விமானியோ, "பயணிகள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் எங்களால் நிதானமாக செயல்பட முடிந்தது" என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.
பயணிகள் பத்திரமாக மீட்பு:
தரை இறங்கிய உடன் அங்கு வந்த மீட்புப் படையினர் விமானிகள் மற்றும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். விமான நிலையத்தை அடைந்த பயணிகள் தங்களின் திகிலான அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் காப்மேன் என்ற பயணி, "உலகின் தலைசிறந்த லேண்டிங் இதுதான்" என்றார்.
மோசமான ஆண்டு இது:
விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.