சிரியா உள்நாட்டுப் போர்... அமெரிக்கா, ரஷ்யா உட்பட 8 நாடுகள் என்ன செய்கின்றன?
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக எதிராக என மொத்தம் 8 நாடுகள் அப்பிராந்தியத்தில் களத்தில் இருக்கின்றன.
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாட்டுப் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்த வரை பிரச்சனை இல்லை...இதில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியதால் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
ரஷ்யாவின் இந்த தலையீட்டை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறவே விரும்பவில்லை. கடும் சீற்றத்துடன் இருக்கின்றன... ஆனால் சிரியா அதிபர் ஆசாத், நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டிருக்கிறது. சிரியா பிரச்சனையை முன்வைத்து 8 நாடுகள் களத்தில் குதித்துள்ளன.
அமெரிக்கா:
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கு தலைமை வகித்து வருகிறது அமெரிக்கா. அதேபோல் ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவான ப்ரீ சிரியா ஆர்மிக்கும் ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இருந்தபோதும் ப்ரீ சிரியா ஆர்மியால் குறிப்பிடும்படியான முன்னேற்றம் எதனையும் செய்ய முடியவில்லை.
ரஷ்யா:
சிரியா போர்களத்துக்கு வந்துள்ள புதிய நாடு ரஷ்யா. ரஷ்யாவின் இந்த தலையீட்டுக்கு சர்வதேச சமூகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ரஷ்யா, அதிபர் ஆசாத்துக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர்வாதிகள், கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை மட்டுமல்ல.. ஆசாத்தை எதிர்க்கும் அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறோம் என்கிறது ரஷ்யா.
செளதி அரேபியா:
அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்கா சரியாக செயல்படவில்லை என தொடக்கத்தில் குற்றம்சாட்டிய நாடு செளதி. ஏனெனில் ஈரானுடன் ஆசாத் நெருக்கமாக உறவை பேணிவருகிறார். தற்போது அமெரிக்காவுடன் கை கோர்த்து சிரியாவில் வான்வழித் தாக்குதல்களுக்கு உதவி வருகிறது செளதி.
ஈரான்:
சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கிய நேரத்தில் அவர் உதவிக் கரம் நீட்டியது ஈரானிடம்தான்.. சிரியாவுக்கான ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்து வருகிறது ஈரான். 2012ஆம் ஆண்டு முதலே ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆசாத் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அத்துடன் சிரியா ராணுவத்துக்கான ஆலோசகர்களாக பெரும் எண்ணிக்கையில் ஈரான் நாட்டவரே உள்ளனர்.
துருக்கி, கத்தார்
சிரியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுடன் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியது துருக்கி. சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த தமது வான்வழியை பயன்படுத்திக் கொள்ளவும் துருக்கி அனுமதித்தது.
சிரியாவில் கிளர்ச்சி குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பது கத்தார்தான். கத்தாரும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துகின்றன. இருப்பினும் கத்தார் நாடு, பிணைக் கைதிகளாக இருப்போரை மீட்பதற்காக அல்நூஸ்ரா முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதும் கத்தார்தான்.
பிரான்ஸ், இங்கிலாந்து
சிரியாவில் பிரான்சின் பங்கு என்பது மிகக் குறைவுதான். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக முதலில் வான்வழித் தாக்குதல் நடத்திய நாடுகளில் பிரான்சும் ஒன்று. ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல ஒதுங்கியிருக்கிறது.
பிரான்ஸைப் போல இங்கிலாந்தின் பங்களிப்பும் இங்கு குறைவுதான். இங்கிலாந்து நாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் இலக்கு வைத்ததாக கூறி ஆளில்லா விமானங்கள் மூலம் இங்கிலாந்து தாக்குதலும் நடத்தியிருந்தது. அதேநேரத்தில் சிரியாவில் முழுமையாக தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. இருப்பினும் விரைவில் அமெரிக்காவைப் போல விரைவில் இங்கிலாந்தும் களத்துக்கு வரக் கூடும்.