ஜிகாதி போராளிகளுக்கு கிரிக்கெட்டை ஏன் பிடிக்காது தெரியுமா?
இஸ்லாமாபாத்: உலகமெங்கும் கிரிக்கெட் ஜுரம் ஏறியுள்ளது. ஆனால் உலகில் ஒரு குழுவிற்கு கிரிக்கெட் என்றாலே அலர்ஜி. அதை ஏதோ சாத்தான் என்பதை போல பார்க்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, ஜிகாதி எனப்படும் இஸ்லாம் பெயரை பயன்படுத்தும் போராளி குழுக்கள்தான்.
உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரவியுள்ளது. இந்த ரசனையை குலைக்க வேண்டும் என்பதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு மிக தீவிரமாக உள்ளது.
லஷ்கர் புத்தகத்தில் சாடல்
லஷ்கர் தீவிரவாத அமைப்பு வெளியிடும் ஜர்ப்-இ-தொய்பா என்ற இதழில் கிரிக்கெட் போட்டி குறித்து மிகவும் சாடப்பட்டுள்ளது. அந்த புத்தகம் பாகிஸ்தானில் பரவலாக வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டு மக்களுக்கு கிரிக்கெட்டை பார்த்து நேரத்தை விரையம் செய்ய முடிகிறது. ஆனால் ஜிகாதிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.
பேட்டை போட்டுவிட்டு வாளை எடுங்கள்
போராட்டம் அனைத்துமே மதத்துக்காக இருக்க வேண்டுமே தவிர, கிரிக்கெட்டுக்காக இருக்க கூாடது. கிரிக்கெட் மோகத்துக்கு கண்டிப்பாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அந்த நேரத்தை மதத்துக்காக பயன்படுத்த வேண்டும். நமது மதம் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. எனவே பேட்டை கீழே போட்டுவிட்டு வாளை கையில் எடுங்கள்.
காஷ்மீருக்காக சாகலாமே
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தோற்றுவிட்டதற்காக தற்கொலை செய்து கொள்வோர்களை பார்த்து கேட்கிறோம்.... காஷ்மீருக்காக சண்டை போட்டு சாக தயாரா? இஸ்லாம் மீதான பற்றுதலை நீக்குவதற்காக மேற்கத்திய நாடுகளால் கிரிக்கெட் புகுத்தப்படுகிறது. கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆபீசுக்கு லீவு போட்டுள்ளனர் பல ரசிகர்கள். நாங்கள் எத்தனையோ முறை ஜிகாதி செய்ய வாருங்கள் என்று போன் செய்தோம். அப்போதெல்லாம் அவர்கள் வரவேயில்லை. இதற்கு மட்டும் எப்படி நேரத்தை ஒதுக்கலாம்? என்றும் அந்த இதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்
1999ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதன்பிறகு பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்த ஐசிசி தடை விதித்தது. இந்த தாக்குதலும், கிரிக்கெட் மீதான மோகத்தை குறைத்து தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் தீவிரவாதிகளின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஊருக்கு உபதேசம்
இதில் வேடிக்கை என்னவென்றால், லஷ்கர்-இ-தொய்பா இவ்வளவு தூரம் விமர்சனம் செய்யும் கிரிக்கெட்டிலேயே ஊறிய தாவூத் இப்ராகிம்தான், லஷ்கருக்கு அதிக நிதி உதவி அளிக்கும் நபருமாவார். கிரிக்கெட் சூதாட்டங்களில் தாவூத்தின் கைவண்ணம் உள்ளது என்பதை பல விசாரணைகள் உறுதியும் செய்துள்ளனர்.