உ.பி. சட்டசபைத் தேர்தலில் 325-க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் 325-க்கும் அதிகமான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, 7 ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

உ.பி. தேர்தல் கருத்து கணிப்புகள்
உ.பி. தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. அதேநேரத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக சுமார் 100 இடங்களை இழக்க வாய்ப்புள்ளது என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான அதிருப்தி இருக்கிறது என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜக மும்முரம்
இதனை சமன் செய்யும் வகையில் பல்வேறு நலத் திட்ட பணிகள், வளர்ச்சி திட்டங்கள் அசுரவேகத்தில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளிலும் பாஜக படுமுனைப்புடன் உள்ளது. இன்று பாஜகவின் பூத் தலைவர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

இலவச உணவு தானியங்கள்
இக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலையின் போது ராமநவமி முதல் தீபாவளி வரை பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 80 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். உ.பி.யில் மட்டும் 15 கோடி பேர் இத்திட்டத்தால் பயனடைந்திருக்கின்றனர். உ.பி.. மாநில அரசும் உணவு தானியங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

325-க்கும் அதிகமான இடங்கள்
பாஜகவை பூத்துகள் நிலையில் வலிமைப்படுத்தினால் நிச்சயம் நம்மால் 325 இடங்களுக்கும் அதிகமாக வெல்ல முடியும். ஈடா பகுதியில் மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் பகுஜன் சமாஜ் கட்சியும் எங்கே போயிருந்தன? நாம்தான் கொரோனாவை எதிர்த்து போராடினோம். கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாத்தோம். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.












Click it and Unblock the Notifications