நொய்டா.. 102 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடம் வெறும் 9 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது எப்படி?பின்னணி!
லக்னோ: அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் விதிகளை மீறியதாக புகார் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், இந்த பகுதியிலிருந்து வெளியேறும் தூசிகளால் காற்று மாசு எவ்வளவு ஏற்படும் என்பதை கணிக்க நவீன இயந்திரங்கள் கட்டிடங்களின் அருகே வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கட்டிடத்தை இடிப்பதன் மூலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டிடம் இடிப்பதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை இந்த கட்டுரை தொகுத்து வழங்குகிறது.
இந்தியாவில் கட்டிடங்கள் இடிக்கப்படுவது ஒரு வகை வேடிக்கைதான். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இது ஒரு வேடிக்கையான செயலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நாம் எல்லோருக்கும் தெரிந்த வரையில் மஞ்சள் நிற ஜேசிபி ஒன்று போதும் ஒரு கட்டிடத்தை இடிக்க. பக்கத்து தெருவில் இந்த பூதாகரமான எந்திரம் வந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தை இடித்துக்கொண்டிருப்பதை நாம் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்திருப்போம்.
ஆனால் 30 மாடி கட்டிடங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளை எப்படி இடித்து தள்ள முடியும்? அதுவும், இதேபோன்று இரண்டு கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் எடுக்கும் என நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?. யோசிப்பது என்றால் உங்களுக்கு அலர்ஜி எனில் அதை விட்டுவிடுங்கள், நானே சொல்லிவிடுகிறேன். ஆமாம் இந்த இரண்டு பெரிய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்க சுமார் 9 விநாடிகள் போதுமானது.
அட ஆமாங்க நீங்க இந்த கட்டுரையை படிச்சு முடிக்கிறதுக்குள்ள அந்த கட்டிடங்களை இடிச்சி தள்ளிடுவாங்க. இதை இடிக்க சுமார் 3,700 கி.கி வெடி மருந்து தேவை. இந்த இரட்டை கோபுரங்கள் நொய்டாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இதை இடிக்கும்போது இதன் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சேதாரம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். எனவே சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் இதை இடித்து முடித்து அதன் தூசிகள் அனைத்து அடங்கும் வரை இந்த பகுதிக்குள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்று காலை 7 மணிக்கே இங்கிருந்த மக்கள் சுமார் 7,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரவர் குடியிருப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல காலை முதல் மாலை 4 மணி வரை எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடிப்பு மூலம் உருவாகும் காற்று மாசை கணக்கிட இப்பகுதிகளில் நவீன இயந்திரங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க இதை விட பெரிய பாதிப்பு ஒன்று உள்ளது. அதுதான் நில அதிர்வு. இவ்ளோ பெரிய கட்டிடம் திடீர்னு இடிஞ்சு விழுந்தா அந்த இடத்துல நில அதிர்வு ஏற்படாதா என்ன? கண்டிப்பா ஏற்படும். அதுவும் ரிக்டர் அளவில் 4 வரை இது உணரப்படும். ஆனா நொய்டா நகரம் ரிக்டர் அளவில் 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் திறன் கொண்டது. எனவே இந்த கட்டிட இடிப்பு பாதிப்புகளை பெரிய அளவில் ஏற்படுத்தாது. இதுதான் இந்தியாவில் அதிக உயரம் கொண்ட கட்டிட இடிப்பு சம்பவம் என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ரூர்க்கி, எடிஃபைஸ் இன்ஜினியரிங் ஆகியவை இந்த இடிப்பு பணிகளை மேற்கொள்கின்றன. இந்நிறுவனங்கள் ஏற்கெனவே 18 மாடி கட்டிடத்தை இடித்த அனுபவத்தை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் முதலில் அபெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள 102 மீட்டர் உயரம் கொண்ட முதல் குடியிருப்பு தகர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 92 மீட்டர் உயரம் கொண்ட இரண்டாவது குடியிருப்பு கட்டிடம் தகர்க்கப்படுகிறது. இவையனைத்தும் உட்புறமாகவே இடிந்து விழும் வகையில் வெடி மருந்துகளால் நிரப்பப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் பங்குதாரரான உக்தர்ஷ் மேத்தா, இந்த இடிப்பு பணிகளில் அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தூசிகளிலிருந்து தங்கள் வீடுகளை பாதுகாக்க துணிகளை பயன்படுத்தி பக்கத்து குடியிருப்புகளை மூடியுள்ளோம். அதேபோல இடிக்கப்படும் கட்டிடத்தின் இடிபாடுகள் அதே பகுதிகளில் தேங்கி நிற்க, கட்டிடத்தை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த கட்டிடங்களுக்கு அருகில் உள்ள நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலையில் பிற்பகல் 2.15 முதல் 2.45 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இடிக்கும் போது கிளம்பும் துசிகளை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கவனமாக செய்யப்பட்டிருந்தாலும், கட்டிட இடிப்புக்கு பின்னர் தேங்கும் 35,000 கன மீட்டர் இடிபாடுகள் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த கட்டிடங்கள் பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்காக ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போயுள்ளது.
சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.