உ.பி. தேர்தல்: தேதி அறிவிச்சு 48 மணி நேரம்தான் ஆச்சு.. பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 எம்எல்ஏக்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் பாஜகவிலிருந்து 6 எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சயில் இணைந்ததால் கட்சி தலைமைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக போராடி வருகிறது.
பாஜகவுக்கு அதிர்ச்சி
இந்த நிலையில் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது உத்தரப்பிரதேச மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் 6 மூத்த தலைவர்கள் மாறியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முக்கிய தலைவராக கருதப்படும் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவிலிருந்து விலகினார்.
மவுரியா
இதையடுத்து பாஜக எம்எல்ஏ அவதார் சிங் பாடானா புதன்கிழமை அன்று கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தார். அது போல் மவுரியாவுக்கு ஆதரவு அளித்து மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
48 மணி நேரத்தில் 6 பேர்
கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் திண்ட்வார் தொகுதியின் பிரஜேஷ் பிரஜாபதி, தில்ஹாரின் ரோஷன் லால் வர்மா, பில்ஹௌரின் பகவதி சாகர் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகினர். இப்படி 48 மணி நேரத்தில் 6 பேர் விலகியது பாஜகவுக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி
அதிலும் பகவதி சாகரை பாஜக இழந்துள்ளது கட்சிக்கு பெரும் பலத்தை இழந்ததுபோல் பார்க்கப்படுகிறது. கான்பூரின் ஊரக சட்டசபை தொகுதியான பில்ஹௌர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், ஜனதா கட்சி உள்ளிட்டவையே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்த தொகுதியில் 2017ஆம் ஆண்டு போட்டியிட்ட பகவதி வெற்றியை தேடி தந்தார். பாஜக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது பெரும் சாதனையாகவே கருதப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி
அதிலும் மாநில கட்சிகளின் கோட்டையை தகர்த்தெறிவது என்றால் அத்தனை லேசுப்பட்டா காரியமா என்ன? தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகவதி பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். இவர் 3 முறை எம்எல்ஏவாகவும் இரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இருவர் பாஜகவில் இணைப்பு
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் முதல்முறையாக பில்ஹௌரில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் இரு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கடசி எம்எல்ஏ நரேஷ் சைனியும் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஹரி ஓம் யாதவும் பாஜகவில் நேற்று இணைந்துள்ளனர்.