பாஜகவுக்கு விழுந்த அடி.. இடைத்தேர்தலில் 3-லும் அவுட்! உ.பி செட்பேக் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா?
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார். மேலும் அங்கு நடைபெற்ற 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் சமாஜ்வாதியும், மற்றொன்றில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
மெயின்புரி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் சுமார் 65 ஆயிரம் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ராம்புர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். கடவ்லி தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். உபியில் இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி.. இது சாதாரண வெற்றியல்ல.. குஜராத் மாடலின் வெற்றி.. பட்டென கூறிய பிரகலாத் ஜோஷி
இடைத்தேர்தல்
நாடு முழுவதும் ஒரு லோக்சபா தொகுதி மற்றும் 6 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சமீபத்தில் நடந்தது. உத்தர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் என 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 1 மக்களவைத் தொகுதி மற்றும் 2 சட்டசபைத் தொகுதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உட்பட்டவை. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.
உ.பியில் 2 எம்.எல்.ஏ தொகுதிகள்
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் சதார் சட்டசபைத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஜம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அதேபோல் உ.பியின் கடவ்லி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த பாஜகவை சேர்ந்த விக்ரம் சிங் சைனி முசாபர்நகர் கலவர வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து இந்த 2 இடங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மெயின்புரி
அதேபோல, மெயின்புரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது. நாடு முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தல் உத்தர பிரதேச மாநிலம் மெயின்பூரி மக்களவைத் தொகுதிக்கானது தான். அந்த தொகுதியில் எம்பியாக இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானதால், அது காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.
டிம்பிள் யாதவ் முன்னிலை
இந்த நிலையில், மெயின்புரி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இதே போல், ராம்புர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். கடவ்லி தொகுதியில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
3 தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு
இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உ.பியில் மட்டுமே பாஜக ஆட்சி செய்கிறது. இந்த இடைத்தேர்தலால் ஆட்சியில் மாற்றம் ஏற்படாது என்ற போதிலும், 2024 லோக் சபா தேர்தலை உற்று நோக்கி வரும் பொதுமக்களுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு திசையைக் காட்டக்கூடும். அந்தவகையில், பாஜக ஆளும் உபியில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.