உ.பி.: யோகி போட்டியிடும் கோரக்பூர் உட்பட.. 57 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! பலத்த எதிர்பார்ப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் யார் ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கும் விதமாக நாளைய வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் முடிந்திருக்கிறது.
கிரைம்ரேட் ஏறிட்டே போகுதே! சமாஜ்வாதி கட்சி பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! 7 பேர் கைது
உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, மத்தியில் ஆட்சியில் அமரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நாளை 6ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.மேற்கில் தொடங்கி நாளை கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
6ம் கட்ட தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் இதுவரை 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. நாளை நடைபெறும் 6வது கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 57 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் அம்பேத்கர் நகர், சித்தார்த்நகர், கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் அனல் பறந்துவருகிறது.
பாஜக
இந்த 57 தொகுதிகளில் பாஜக கடந்த தேர்தலில் 48 இடங்களைக் கைப்பற்றியது. தற்போது இந்த தொகுதிகளில் 11 ரிசர்வ் தொகுதிகள் இருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கிறது. பாஜகவுக்கு நாளை நடக்க இருக்கும் தேர்தல் மிக முக்கியமாகும். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி பலமாக இருக்கிறது. ஆக்ரா பகுதிகளில் பகுஜன் சமாஜ் பலமாக இருக்கிறது. முதல்வர் தொகுதிகளில் பாஜக பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள். அதில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் லல்லு தம்குகியில் போட்டியிடுகிறார். பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சுவாமி பிரசாத் மவுரியா பைசல்நகரிலும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரிலும் போட்டியிடுகிறார்கள். இதனால் நாளைய தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கோரக்பூர்
சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக கோரக்பூரில் களமிறங்கும் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக இந்து யுவ வாஹினி உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. யோகியை எதிர்த்து, சமாஜ்வாதி சார்பில் முன்னாள் பாஜக அமைச்சர் உபேந்திரநாத்தின் மனைவி களமிரங்குகிறார்.
ஆஸாத் கட்சியின் தலைவர் சந்திரசேகர ஆஸாத்தும் யோகியை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்த தேர்தல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.