உஷார்.. 5 ரூபாய் நியூஸ் பேப்பரை வைத்து.. கோடிக்கணக்கில் பணம், நகையை சுருட்டும் கொள்ளையர்கள்.. ஷாக்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் வெறும் நியூஸ் பேப்பரை பயன்படுத்தி கோடிக்கணக்கிலான பணம், நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் கிளம்பியுள்ளது.
அந்த மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் அந்த கும்பல், இந்த நூதன முறையை பயன்படுத்தி தனது கைவரிசையை காட்டி வந்ததை போலீஸார் இப்போதுதான் கண்டறிந்துள்ளனர்.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரிய நெட்வொர்க்கை போல செயல்படுவதால் அவர்களை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.

க்ளூ கிடைக்காமல் திணறல்..
உத்தரபிரதேச மாநிலத்தின் காஸியாபாத் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால், இந்தக் கொள்ளையர்கள் எந்தவொரு தடயத்தையும் விட்டுச் செல்லாததால் அவர்களை பிடிப்பது போலீஸாருக்கு மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. பொதுவாக, ஒவ்வொரு கொள்ளையர்களுக்கும் பிரத்யேகமாக சில பாணிகள் இருக்கும். அதனை கண்டுபிடித்துவிட்டால், ஓரளவுக்கு அவர்களை போலீஸார் நெருங்கி விடுவார்கள். ஆனால், இந்தக் கொள்ளையர்களோ அப்படி எந்த துப்பையும் கொடுக்காமல் போலீஸாரை திணறடித்து வந்தனர்.

லேட்டஸ்ட் கொள்ளை..
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற கொள்ளையில்தான் அவர்கள் பயன்படுத்தும் முறையை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். காஸியாபாத்தில் உள்ள அவந்திகா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கடந்த அக்டோபர் 29-ம் தேதி வெளியூர் சென்றிருந்தனர். பிறகு நேற்று முன்தினம் காலையில்தான் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது அவர்களின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மர்ம 'நியூஸ்பேப்பர்'
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த வீட்டுக்கு சென்று கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். வழக்கம் போல இந்த முறையும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீஸார் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ரவீந்திர குமார் அவரது வீட்டு வராண்டாவில் 29-ம் தேதியிட்ட செய்தித்தாள் இருப்பதை பார்த்துள்ளார். எந்தவொரு செய்தித்தாளுக்கும் தான் ஆர்டர் கொடுக்காததால் சந்தேகமடைந்த அவர், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

தெரியவந்த பாணி..
இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் அந்த செய்தித்தாளை கைப்பற்றி கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்குள்ள பேப்பர் கடைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த செய்தித்தாளை பயன்படுத்திதான் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதாவது, ஒரு பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டால், அதிகாலையிலேயே அந்தப் பகுதியில் இருக்கும் பேப்பர் கடையில் 50 செய்தித்தாள்களை அவர்கள் வாங்கி விடுவர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் செய்தித்தாள்களை அவர்கள் போடுவர்.

களத்தில் இறங்கிய போலீஸார்
பின்னர் ஒரு 10 மணிவாக்கில் அங்கு வரும் கொள்ளையர்கள், யார் வீட்டில் செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருக்கிறதோ, அவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என முடிவு செய்து அந்த வீட்டுக்குள் சென்று தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளனர். இதற்கு முன்பு கொள்ளை நடைபெற்ற வீடுகளிலும் இதே பாணியையே அவர்கள் கடைப்பிடித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த க்ளூவை வைத்து அந்தக் கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications