பத்மராஜன் மாதிரி.. உ.பி.யிலும் ஒரு தேர்தல் மன்னன்! 94வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ஹஸ்னுராம்!
லக்னோ: 93 தேர்தல்களில் போட்டியிட்ட முன்னாள் அரசு அதிகாரி மீண்டும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஹஸ்னுராம் என்ற முன்னாள் வருவாய்த்துறை ஊழியர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்தமுறை 94வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகள் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ம் தேதி துவங்கி மார்ச் 7 வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை? காரணம் இதுதான்.. முழு பின்னணி
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதில், முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆக்ரா பகுதியில் தேர்தல் மன்னன் ஹஸ்னுராம் போட்டியிடுகிறார்.
ஆக்ராவைச் சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை எழுத்தாளர் ஹஸ்னுராம் அம்பேத்காரி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இது அவருக்கு 94வது முறையாக போட்டியிடும் தேர்தல். 1985ம் ஆண்டில் முதல் முறையாக பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட அவர், அதன்பின்னர் கிராம தலைவர், மாநில சட்டசபை, கிராம பஞ்சாயத்து, சட்ட மேலவை, மக்களவை என எந்த தேர்தலையும் விட்டு வைக்காமல் போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கும் விண்ணப்பித்தார், அது நிராகரிக்கப்பட்டது.
ஆக்ரா
ஹஸ்னுராம் அம்பேத்காரிக்கு 75 வயதாகிறது. 1985 முதல் தேர்தல்களில் போட்டியிடுகிறார். அவர் இந்த முறை ஆக்ரா ஊரகப்பகுதி மற்றும் கேராகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை போட்டியிட்ட 93 தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளார். இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் 100வது தேர்தல் வரை போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக ஹஸ்னுராம் தெரிவித்துள்ளார்.
முதல் தேர்தல்
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஹஸ்னுராம் அம்பேத்காரி கூறுகையில், "பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாக ஒரு கட்சி கூறியதால் 1985ல் அரசு வேலையை ராஜினாமா செய்தேன். ஆனால், கடைசி நேரத்தில் அந்தக் கட்சி எனக்கு சீட்டு கொடுக்கவில்லை. மேலும் என்னால் ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது என கேலி செய்தார்கள். என்னால் முடியும் என்பதை அவர்களுக்கு காட்டுவதற்காக சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தேன். அதுதான் என் முதல் தேர்தல். அதில் நான் மூன்றாவது இடத்தை பிடித்தேன். என்னுடைய முயற்சிக்கு எனது குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர்" என்றார்.
தமிழக தேர்தல் மன்னன்
இவரைப் போலவே தமிழகத்திலும் ஒரு தேர்தல் மன்னன் இருக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். 1988-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இதுவரை 200-க்கும் அதிகமான தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். ஆனால், எதிலும் அவர் வெற்றி பெற்றதில்லை. தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
Recommended Video
பத்மராஜன்
மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்த்து பத்மராஜன் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் அதிக முறை தொடர்ந்து போட்டியிட்டதால் லிம்கா மற்றும் கின்னஸ் போன்ற சாதனைப் புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார். இதனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் எனவும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதையடுத்து, பத்மராஜன் 220 முறை தேர்தலில் போட்டியிட்டு சாதனைப் படைத்திருக்கிறார்.