தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பியோருக்கு ஓட்டுகளால் ஓங்கி அடி கொடுங்க: பிரச்சாரத்தில் யோகி ஆவேசம்
லக்னோ: ‛‛கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பியோரை ஓட்டுகளால் ஓங்கி அடியுங்கள்'' என உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. முதல்-அமைச்சராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அங்கு, 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பிப்.,10ல் முதல் கட்டமாகவும், பிப்.,10, 20, 23, 27, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதனால் உத்தரபிரதேசத்தில் முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பா.ஜ.க., தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை.. சேலத்துக்கு அவர் செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
எதிர்க்கட்சிகள்
இதுஒருபுறம் இருக்க இழந்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் பா.ஜ.க, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓட்டுகளால் அடியுங்கள்
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னுரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓட்டு சேகரித்தார். கூட்டத்தில் அவர் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: உத்தர பிரதேச மக்களுக்கு முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும். இது நிகழும் தருவாயில் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பியோர், மோடி, பா.ஜ.க., தடுப்பூசி என விமர்சனம் செய்தவர்களுக்கு உங்கள் ஓட்டுகள் மூலம் ஓங்கி அடி கொடுக்க வேண்டும். யாரேனும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மின்இணைப்பு பெற்றனரா. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சியினர் இருட்டில் வாழ்ந்தனர். அந்த சமயத்தில் திருட்டுகள் அரங்கேறின. தற்போது பா.ஜ.க., மாநிலம் முழுதும் வீடுகளுக்கு மின்வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கோபத்தை தணிக்கலாம்
முஸாபர் நகர் கலவரம் நினைவு இருக்கிறதா. இரண்டு பேர் மாயமாகினர். ஒருவர் லக்னோவில் கலவரத்தை தூண்ட, இன்னொருவர் டெல்லியில் இருந்து பார்த்து ரசித்தார். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?. இன்றும் பா.ஜ.க. நினைத்தால் அதற்கான கோபத்தை தணிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்'' என சமாஜ்வாதி கட்சியை தாக்கி பேசினார்.
மோடி இல்லை
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காலநிலை மாறுபாட்டால் அவரால் வான்வெளி பயணம் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நேற்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.